இந்தியா
சோனியுடன் இணைந்த ஜீ தொலைக்காட்சி: ஒரே நாளில் 30% பங்கு விலை உயர்வு!
சோனி நிறுவனத்துடன் ஜீ தொலைக்காட்சி இணைந்ததை அடுத்து ஒரே நாளில் ஜீ தொலைக்காட்சியின் பங்கு விலை 30 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய தொலைக்காட்சிகளில் ஜி என்டர்டைன்மென்ட் நிறுவனம் மிகப்பெரிய நிறுவனமாக இருந்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஜீ தொலைக்காட்சி நிறுவனம் சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க் இந்தியா என்ற நிறுவனத்துடன் இணைய உள்ளது. சோனி நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட பின்னர் சோனி நிறுவனத்திற்கு சுமார் 53 சதவீத பங்குகளும் ஜி நிறுவனத்திற்கு சுமார் 47 சதவீத பங்குகளும் இருக்கும் என தகவல்கள் வெளியானது.
அதுமட்டுமின்றி சோனி நிறுவனதில் இணைந்த பின்னர் ஜீ தொலைக்காட்சி சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1992ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜீ தொலைக்காட்சி நிறுவனம் இந்திய தொலைக்காட்சி மற்றும் ஊடக சந்தையில் பெரும் ஆதிக்கத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது சோனி மீடியா நிறுவனத்துடன் இணைந்த பின்னர் மீண்டும் எழுச்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜி என்டர்டைன்மென்ட் மற்றும் சோனி இந்தியா ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து புதிய நிறுவனமாக மாறியபின் நாடு முழுவதும் பல மொழிகளில் 70 தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் இரண்டு ஓடிடி சேவைகள் ஆகியவையும் 2 சினிமா ஸ்டூடியோ ஆகியவையும் கொண்ட மிகப்பெரிய பொழுதுபோக்கு நிறுவனமாக உருவெடுக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த இரண்டு நிறுவனங்களின் இணைப்பு குறித்த செய்தி வெளியானதை அடுத்து ஜி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் பங்கு விலை தேசிய பங்கு சந்தையில் 30 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளதாகவும் அதேபோல் சோனி இந்தியாவின் பங்கு விலையும் அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஜி என்டர்டைன்மென்ட் மற்றும் சோனி நிறுவனம் இணைந்து உள்ள நிலையில் விரைவில் இந்நிறுவனம் இந்தியாவின் நம்பர் ஒன் தொலைக்காட்சி ஊடக நிறுவனமாக உருவாக்குவதற்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.