சினிமா

யுவன் ஷங்கர் ராஜாவுக்கு இன்று 39வது பிறந்தநாள் (வீடியோ)

Published

on

சென்னை: இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இன்று தனது 39வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

இசைஞானி இளையராஜா இசையமைத்த பல பாடல்களில் மிகப் பிரபலமானது, ‘மாங்குயிலே பூங்குயிலே’ பாடல். இந்தப் பாடலை வெவ்வேறு பாடல் ராகங்களில் பாடுமாறு சவால் விடப்படுகிறது.

யுவன் தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு நிகராக ரசிகர்களைக் கொண்ட ஒரு இசையமைப்பாளர். ஒரு இசையமைப்பாளருக்காக ஒரு பெருங்கூட்டம் திரையரங்கிற்கு வருகின்றது என்றால் அது இளையராஜா, ரகுமான் தாண்டி யுவனுக்கு மட்டுமே சாத்தியம்.

இளையராஜா கோலோச்சிய காலகட்டங்களில் ஏஆர்.ரகுமான் வந்தபோது மண்ணின் இசையைப் புதிய சப்தங்களின் மூலம் தடம் மாற்றினார். பெரிதாகத் திட்டம் ஏதுமில்லாமல் நான் இசையமைக்கிறேன் என்று விளையாட்டுத் தனமாகக் களமிறங்கிய யுவன் ஷங்கர் ராஜா தன்னைத் தானே செதுக்கிக் கொண்டு இசைச் சிற்பியானார். இயக்குநர்களின் இசையமைப்பாளரானார்.

யுவன் இன்று 125 படங்களைத் தாண்டி கொடிக்கட்டி பறக்கும் ஒரு இசையமைப்பாளர், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், ஆர்யா, ஜீவா, ஜெயம் ரவி, விஷால், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, அட்டக்கத்தி தினேஷ் வரை இவர் இசையமைக்காத நடிகர்களே இல்லை.

ஒரு படத்திற்கான விசிட்டிங் கார்டாக யுவன் பல படங்களில் இருந்துள்ளார், ஆம், சென்னை-28, துள்ளவதோ இளமை, அறிந்தும் அறியாமலும், ராம், கற்றது தமிழ் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

இசையமைப்பாளர் என்பவர் ஒரு படத்தின் முதுகெலும்பு போல், அப்படி யுவன் தான் இசையமைக்கும் ஒவ்வொரு படத்தின் கதாபாத்திரத்தையும் நம் காது வழியாக நம் வீட்டிற்கே கொண்டு வந்துவிடுவார்.

அது கற்றது தமிழ் பிரபாகரனாக, புதுப்பேட்டை கொக்கி குமாராக, காதல் கொண்டேன் வினோத்தாக, அறிந்தும் அறியாமலும் குட்டியாக, ஏன் மங்காத்தா விநாயக் மகாதேவாகக் கூட நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பார்.

பரபர பட்டாம் பூச்சியில் ஒரு அப்பாவின் தாலாட்டு, ஆராரிராரோ அம்மாவிற்கான தாலாட்டு, தோஸ்து படா தோஸ்து என்று நண்பர்களுக்கும் சேர்த்து தாலாட்டு பாடியவர் யுவன்.

வாழ்க்கையில் காதல் வருகின்றதா, காதல் தோல்வியடைகின்றதா, அடுத்தக்கட்டத்தை நோக்கி பயணம் செல்கின்றதா, இப்படி இன்பம், துன்பம், வலி, நட்பு, பிரிவு, காதல், காமம் வரை யுவன் நம் வாழ்வின் உணர்வுகளை ஒரு இசையின் வழியாகத் தந்துக்கொண்டே இருக்கின்றார்.

அவரின் 39வது பிறந்தநாளான இன்று நம் வாழ்த்துக்களைக் கூறுவதோடு, இதுபோல் பல உணர்வுமிகுந்த இசையை யுவன் நமக்காகத் தரவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்.

seithichurul

Trending

Exit mobile version