தமிழ்நாடு
யூடியூப் பார்த்து பிரசவம்: குழந்தை பலி, தாய் கவலைக்கிடம்!
![pregnant alcohol2 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/pregnant-alcohol2.jpg)
யூடியூப் பார்த்த குழந்தை பெற்றதால் பரிதாபமாக குழந்தை இறந்ததாகவும் தாய் உயிருக்கு போராடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் என்ற பகுதியைச் சேர்ந்த லோகநாதன் மற்றும் கோமதி ஆகிய இருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த நிலையில் சமீபத்தில் கோமதி கர்ப்பமுற்ற நிலையில் அவருக்கு டிசம்பர் 13ஆம் தேதி பிரசவ நாள் என்று மருத்துவர்கள் குறித்து இருந்தனர்.
இந்த நிலையில் குறிப்பிட்ட நாளில் மனைவிக்கு பிரசவ வலி வரவில்லை என்றும் ஐந்து நாள் தாமதமாக டிசம்பர் 18ம் தேதி கோமதிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது என்றும், இதனை அடுத்து லோகநாதன் மற்றும் அவருடைய அக்கா ஆகியோர் யூடியூபில் பார்த்து அதன்படி பிரசவம் பார்த்ததாக தெரிகிறது.
இதனால் குழந்தை இறந்து பிறந்ததாகவும் தாய்க்கு இரத்தப்போக்கு அதிகமாகி விட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் சிகிச்சை பெற்றுவரும் கோமதி மற்றும் அவருடைய உறவினர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
குழந்தை பிறப்பு என்பது ஒரு தாய்க்கு மறுபிறவி என்பதால் அதில் எந்தவிதமான ரிஸ்க்கும் எடுக்கக் கூடாது என்றும் மருத்துவர்களின் கண்காணிப்பில் தான் பிரசவம் நடக்க வேண்டும் என்றும் ஏற்கனவே அறிவித்திருந்தும் பலர் இன்னும் யூடியூபே பார்த்து குழந்தை பெற்றுக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.