தமிழ்நாடு
குடி போதையில் ரகளை: சமையல் சேனல் டாடி ஆறுமுகம் மகன் மீது வழக்குப்பதிவு!
பிரபல யூட்யூப் சமையல் சேனல் டாடி ஆறுமுகம் குறித்து அறியாதவர்கள் இருக்க முடியாது. இந்த நிலையில் அவரது மகனை போலீஸ் தேடி வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல யூடியூப் சேனல் சமையல் கலைஞர் டாடி ஆறுமுகம் மகன் கோபிநாத் என்பவர் சமீபத்தில் புதுச்சேரியில் உள்ள ஓட்டல் ஒன்றில் மது அருந்த சென்றுள்ளதாக தெரிகிறது. நண்பர்களுடன் மது அருந்த வந்த கோபிநாத் ஊழியர்களை கடுமையான வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.
அதுமட்டுமின்றி 8 மணிக்கு வந்த அவர்கள் இரவு 11 மணி ஆன பின்னரும் தொடர்ச்சியாக மது கேட்டுள்ளனர். அதனை அடுத்து மது கடை ஊழியர்கள் 11 மணிக்கு மேல் மது விற்பதற்கு அனுமதி இல்லை என்று கூறியுள்ளனர். போதையில் இருந்த கோபிநாத் மற்றும் அவரது நண்பர்கள் ஓட்டல் ஊழியர்களை கடும் வார்த்தைகளால் திட்டியதோடு ஹோட்டலை சூறையாடி உள்ளனர்.
இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து காவல்துறையினர் விரைந்து வந்து கோபிநாத்தை சமாதானம் செய்துள்ளனர். ஆனால் அவர்கள் காவல்துறையிடமும் சண்டை செய்துள்ளனர். இதனை அடுத்து காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு டாடி ஆறுமுகம் மகன் கோபிநாத் உள்பட 3 பேரை போலீசார் அழைத்தனர்.
ஆனால் அவர்கள் காவல்நிலையம் செல்லாமல் தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து அவர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமையல் யூடியூப் சேனல் மூலம் உலகப் புகழ் பெற்ற டாடி ஆறுமுகத்தின் மகன் கோபிநாத் போதையில் ரகளை செய்ததால் போலீசாரால் தேடப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.