ஆட்டோமொபைல்
ஹெல்மெட் இல்லாமல் இரு-சக்கர வாகனம் ஓட்டினால் 3 மாதம் லைசன்ஸ் இடைநீக்கம்.. போக்குவரத்துக் காவல் அதிரடி அறிவிப்பு!
மும்பையில் ஹெல்மெட் இல்லாமல் இரு-சக்கர வாகனம் ஓட்டினால், 3 மாதம் லைசன்ஸ் இடைநீக்கம் செய்யப்படும் என மும்பை போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.
இந்த புதிய நடைமுறையால் போக்குவரத்து விதிமுறை மீறல்களைக் குறைக்க உதவும். ஹெல்மெட் பயன்படுத்துவது அதிகரிக்கும் என மும்பை போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
லைசன்ஸ் இடைநீக்கம் செய்யப்படுவது மட்டுமல்லாமல் அந்த வாகனத்தை ஓட்டி சென்றவர் ஆர்டிஓ அலுவலகம் அனுப்பப்படுவார். அங்கு ஓட்டுநர் விதிமுறை மீறலால் ஏற்படும் விபத்து வீடியோக்களையும் டிராபிக் விதிமுறை வீடியோக்களையும் 2 மணி நேரத்துக்குப் பார்க்க வேண்டும்.
இவை மட்டுமல்லாமல் ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காக அபராதமும் செலுத்த வேண்டும் என போக்குவரத்துக் காவல் துறை தெரிவித்துள்ளது.
சென்ற ஜனவரி மாதம், டிராப்பிக் சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும் போது ஹாரன் அடிப்பவர்களைக் கண்டறிந்து, அபராதம் விதிக்கும் முறையையும் மும்பை போக்குவரத்துக் காவல்துறை அறிமுகம் செய்து இருந்தது.
உலகிலேயே டிராப்பிக் சிக்னல்களில் ஹாரன் அடிப்பதன் மூலம் அதிக இரைச்சலை ஏற்படுத்தும் நகரம் மும்பை என்பதும் குறிப்பிடத்தக்கது.