தமிழ்நாடு
தூத்துக்குடியில் போட்டியா? ஸ்டாலினை கேட்க வேண்டிய கேள்வி இது: கனிமொழி அதிரடி!
திமுக மாநிலங்களவை உறுப்பினராக உள்ள கனிமொழி வரும் மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள வேளையில், இதுகுறித்த கேள்விக்கு தூத்துக்குடியில் இருந்தே பதில் அளித்துள்ளார் கனிமொழி.
மாநிலங்களவையில் சிறப்பாக செயல்படும் கனிமொழி குலசேகரப்பட்டிணம் ஏவுதளம், ஸ்டெர்லைட் போன்ற விவகாரங்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் திமுக நடத்தும் ஊராட்சி சபைக் கூட்டங்களில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டு வருகிறார். இதனையடுத்து கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் நேற்று முதல் தூத்துக்குடியில் ஊராட்சி சபை கூட்டங்களில் கலந்துகொண்டு வரும் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஊராட்சி சபைக் கூட்டங்களில் கலந்துகொள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பகுதியை ஒதுக்கியிருக்கிறார்கள். எனக்கு தூத்துக்குடி பகுதியை தலைவர் ஸ்டாலின் ஒதுக்கியுள்ளார். அதன்படி இங்கு வந்துள்ளேன் என்றார்.
இதனையடுத்து நீங்கள் தூத்துக்குடியில் போட்டியிடுவதற்கு இதனை ஒரு அச்சாரமாக எடுத்துக் கொள்ளலாமா என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த கனிமொழி, இது தலைவர் ஸ்டாலினைக் கேட்க வேண்டிய கேள்வி. என்னுடைய கட்சியின் தலைவர் என்ன முடிவெடுத்தாலும் அதற்கு நான் கட்டுப்படுவேன் என்றார்.