இந்தியா
முதல்வர் பதவியில் இருந்து விலக மேலிடம் உத்தரவா? கர்நாடகத்தில் பரபரப்பு!
![Yedurappa - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/03/Yedurappa.jpg)
கர்நாடக மாநில முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பா விலக வேண்டுமென பாஜக மேலிடம் உத்தரவிட்டு இருப்பதாக செய்திகள் வெளி வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநில முதல்வராக 2019ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி எடியூரப்பா பதவி ஏற்றார். அவர் இன்னும் ஒரு சில நாட்களில் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ள நிலையில் திடீரென அவர் ராஜினாமா செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
எடியூரப்பாவுக்கு தற்போது 78 வயது ஆவதால் வயது முதிர்வு காரணமாக அவர் பதவி விலக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் பாஜக மேலிடத்திற்கும் எடியூரப்பாவிற்கும் பிரச்சினை என்றும் அதன் காரணமாக பாஜக மேலிடம் அவரை முதல்வர் பதவியிலிருந்து விலகுமாறு உத்தரவிட்டு இருப்பதாகவும் இதனை அடுத்து அவர் ராஜினாமா செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து மாநிலத்தின் முதல்வர் யார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கடந்த 2018ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக 104 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக இருந்தது. இதனையடுத்து ஆட்சி பொறுப்பேற்ற எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் மூன்று நாட்களில் பதவி விலகினார்.
அதன்பின்னர் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தது. ஆனால் இந்த கூட்டணி ஆட்சி ஒரு சில மாதங்களிலேயே முடிவுக்கு வந்ததை அடுத்து எடியூரப்பா மீண்டும் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.