இந்தியா
நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா வெற்றி: பதவி விலகினார் சபாநாயகர்!
கர்நாடக சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடியூரப்பா வெற்றிபெற்றார். இதனையடுத்து சபாநாயகர் ரமேஷ்குமார் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
முன்னதாக நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு 6 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால் கர்நாடக அரசு கவிழ்ந்தது. இதனையடுத்து ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்து பாஜக தலைவர் எடியூரப்பா ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதன்படி ஜூலை 26-ஆம் தேதி கர்நாடகா முதல்வராக பதவியேற்ற எடியூரப்பா ஒருவார காலத்திற்குள் தனது பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் வஜுபாய் வாலா உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று கர்நாடக சட்டசபையில் தனது அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் எடியூரப்பா. இதில் விவாதத்துக்கு பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் நேற்றே 17 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு விட்ட நிலையில், எடியூரப்பா அரசு 105 உறுப்பினர்களைப் பெற்று வெற்றிபெற்றது.
எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றதை அறிவித்த சபாநாயகர் ரமேஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்வதாக சில நிமிடங்களில் அறிவித்தார்.