தமிழ்நாடு
கார் விபத்தில் யாஷிகாவுக்கு தெரியாத உண்மை: தாயார் பேட்டி!
நடிகை யாஷிகா ஆனந்த் சமீபத்தில் சென்ற கார் விபத்துக்குள்ளானதை அடுத்து அந்த காரில் பயணம் செய்த அவரது நெருங்கிய தோழி பவானி உயிரிழந்தார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தனது தோழி உயிரிழந்த தகவல் இன்னும் யாஷிகாவுக்கு தெரியாது என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மகாபலிபுரம் சென்ற யாஷிகா தனது தோழி பவானி மற்றும் நண்பர்கள் இருவருடன் காரில் சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தார். யாஷிகா காரை ஓட்டியதாக தெரிகிறது. இந்த கார் திடீரென விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த யாஷிகாவின் தோழி பவானி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
யாஷிகாவும் அவரது நண்பர்களும் படுகாயம் அடைந்ததை அடுத்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் யாஷிகாவின் தோழி பவானி இறந்தது யாஷிகாவுக்கு இன்னும் தெரியாது என்று அவரது தாயார் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
மருத்துவர்கள் இந்த விஷயத்தை அவரிடம் கூற வேண்டாம் என்று கூறியதால் தோழி இறந்த விஷயம் இன்னும் யாஷிகாவுக்கு தெரியாது என்றும், இதுகுறித்து யாஷிகா கேட்டபோது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக கூறி இருப்பதாகவும் அவரது தாயார் தெரிவித்தார்.
மேலும் யாஷிகா எழுந்து நடமாடுவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் ஆகும் என்றும் அவருக்கு இன்னும் ஒருசில அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் யாஷிகாவின் தாயார் கூறினார்.