கிரிக்கெட்
அடிச்சான் பாரு அப்பாயின்மெண்ட்: மகளிர் ஐபிஎல் போட்டியில் சானியா மிர்சா..!
மகளிர் ஐபிஎல் போட்டி தொடர் இந்த ஆண்டு முதல் நடைபெற இருக்கும் நிலையில் சமீபத்தில் 5 அணிகள் இந்த போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டன என்பதும் ஐந்து அணிகளுக்கான 90 வீராங்கனைகளின் ஏலமும் நடைபெற்றது என்பதும் தெரிந்ததே. இந்தியாவின் நட்சத்திர வீராங்கனைகள் கோடி கணக்கில் ஏலம் போனார்கள் என்பதும் உலகின் முன்னணி வீராங்கனைகளும் ஐந்து அணிகளால் ஏலம் எடுக்கப்பட்டார்கள் என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் மகளிர் ஐபிஎல் போட்டியில் இணைந்துள்ளார். இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனியான சானியா மிர்சா சமீபத்தில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் மகளிர் ஐபிஎல் தொடரில் உள்ள அணிகளில் ஒன்றான பெங்களூரு அணியின் வழிகாட்டியாக சானியா மிர்சா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பெங்களூர் அணியின் டுவிட்டர் பக்கத்தில் கூறியபோது, ‘பெண்களுக்கான இந்திய விளையாட்டுகளில் முன்னோடியாக திகழும் சானியா மிர்சா வாழ்க்கை முழுவதும் தைரியமாக பல தடைகளை தாண்டி வெற்றியை பெற்றவர். எனவே பெங்களூர் மகளிர் கிரிக்கெட் அணியின் வழிகாட்டியாக சானியா மிர்சா அவர்களை வரவேற்பதில் பெருமை கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து பெங்களூர் அணியில் உள்ள வீராங்கனைகள் உற்சாகமாக உள்ளனர். தங்களுக்கு ஒரு மிகச்சிறந்த வழிகாட்டி கிடைத்துள்ளதாக வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மகளிர் ஐபிஎல் போட்டிக்கான அட்டவணையை பிசிசிஐ நேற்று அறிவித்தது என்பதும் முதல் போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் சந்திக்க உள்ளது என்றும் குறிப்பிடத்தக்கது. மார்ச் 4ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி மார்ச் 26 ஆம் தேதி முடிவடையும் என்பதும் அன்றைய தினம் இறுதிப் போட்டி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னை பெங்களூர் அணியின் வழிகாட்டியாக தேர்வு செய்தது குறித்து சானியா மிர்சா கூறியபோது, ‘பெங்களூர் அணிக்கு வழிகாட்டியாக நான் தேர்வு செய்யப்பட்டது அறிந்ததும் ஆச்சரியப்பட்டேன், ஆனாலும் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் விளையாட்டு என்பது பெண்களின் வாழ்க்கை தேர்வுகளில் ஒன்றாக இருக்க வேண்டும், பெண்களுக்கு எதிராக எவ்வளவுதான் முரண்பாடுகள் இருந்தாலும் பெண்கள் தங்கள் இலக்குகளை அடைய முடியும் என்றும் தெரிவித்தார்.