இந்தியா
திறமையானவர் என போனஸ் பெற்றவர் பணிநீக்கம்.. கூகுள் இந்தியா ஊழியரின் சோகக்கதை..!
கூகுள் இந்தியா சமீபத்தில் 453 ஊழியர்களை வேலை நீக்கம் செய்த தகவலை பார்த்தோம். இந்த தகவலின் படி வேலைநீக்கம் செய்யப்பட்ட ஒருவர் தான் திறமையாக பணிபுரிந்ததற்காக போனஸ் பெற்றதாகவும் ஆனால் தன்னை நிறுவனம் ஏன் நீக்கிவிட்டது என்பதை இன்று வரை எனக்கு புரியவில்லை என்றும் சோகத்துடன் தனது லிங்க்ட்-இன் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
கூகுள் இந்தியா நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 453 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது. பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு இரவோடு இரவாக மெயில் மூலம் தகவல் அனுப்பப்பட்டதாகவும் கூறப்பட்டது. குருகிராம் கூகுள் இந்தியா அலுவலகத்தில் பணிபுரிந்த 453 ஊழியர்கள் திடீரென ஒரே நாளில் வேலையை விட்டு நீக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்நிறுவனத்தில் பணிபுரிந்து வேலை இழந்த ஒருவர் தனது லிங்க்ட்-இன் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார். நான் நினைக்காத செய்திகள் எனக்கு அன்றைய தினம் கிடைத்தன. கூகுள் நிறுவனத்தின் மேம்பாட்டு மேலாளராக பணி செய்து கொண்டிருந்த நான் இரவு 8:34 மணிக்கு வந்த மெயிலை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அன்றைய தினத்திலிருந்து எனது வாழ்க்கை தலைகீழாக மாறியது.
கூகுள் நிறுவன ஊழியராக நான் நிறுவனத்திற்கு எனது சிறப்பான பணியை வழங்கினேன். மேலும் கடின உழைப்புக்கு எனக்கு ஸ்பாட் போனஸ் கிடைத்தது என்பதை நினைத்து நான் பெருமைப்பட்டேன். ஆனால் இவ்வாறு திடீரென பணி நீக்கம் செய்யப்படுவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. கூகுள் இந்தியாவின் வளர்ச்சிக்காக நான் 24 மணி நேரமும் உழைத்தேன், எனது பங்களிப்புகள் சிறப்பாக இருந்த போதிலும் திறமையானவர்களை நிறுவனம் கைவிடுவது மனவேதனையை அளிக்கிறது.
ஆனால் அவர்கள் சொல்வது போல் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பின்னணி இருக்கும். இந்த மாற்றம் என்னை மேலும் வளர்ச்சி அடைய செய்யும் என்றும் சுய கண்டுபிடிப்புகளுக்கான புதிய பாதைக்கு இட்டுச் செல்லும் என்றும் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். புதிய வாய்ப்புகளுக்காக நான் என் நண்பர்களிடம் உறவினர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன், எனக்கு மீண்டும் ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நினைக்கிறேன். என்று கூறியுள்ளார் அவரது இந்த பதிவை பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.