தமிழ்நாடு
அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீடு சதவிகிதம் உயர்வு: முதல்வர் அறிவிப்பு
அரசு பணி நியமனங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டினை 40 சதவீதமாக உயர்த்த உரிய சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று சட்டப்பேரவையில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை 110 விதியின் கீழ் வெளியிட்டு வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக நகை கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு மற்றும் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் கட்டாயமாக்கும் அறிவிப்பு மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அடுத்த கட்டமாக அரசு பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை 40 சதவீதமாக உயர்த்த உரிய சட்ட மேற்கொள்ளப்படும் என்று சற்றுமுன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
மாற்றத்தை ஊக்குவிப்பதில் பாலின சமத்துவம் முக்கியமானது என்பதை உணர்ந்து நேரடி நியமனம் மூலம் மேற்கொள்ளப்படும் அரசு பணி நியமனங்களில் பெண்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 30 சதவீத இட ஒதுக்கீட்டை 40 சதவீதமாக உயர்த்த உரிய சட்டதிருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பெண்களுக்கு மிகப்பெரிய பலனை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்பட ஒரு சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன என்பதும் விரைவில் பெண்களுக்கு மாத ஊதியம் ரூபாய் 1000 வழங்கும் திட்டம் செயல்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.