தமிழ்நாடு
திடீரென ஆயிரக்கணக்கான பெண்கள் சாலையில் இறங்கி போராட்டம்: ஸ்ரீபெரும்புதூரில் பரபரப்பு!
ஸ்ரீபெரும்புதூரில் திடீரென ஆயிரக்கணக்கான பெண்கள் சாலையில் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் விடுதியில் ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கி உள்ளனர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இந்த பெண்கள் தங்கியிருக்கும் விடுதியில் கடந்த சில மாதங்களாக தரமான உணவு வழங்கவில்லை என புகார் எழுந்தது.
இந்த நிலையில் இந்த தரமற்ற உணவு வழங்கியதால் உடல்நலக் கோளாறு காரணமாக 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் நிலை என்ன என்பது கூட தெரியாமல் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த தகவல் அந்த விடுதியில் தங்கி இருக்கும் பெண்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து திடீரென அந்த விடுதியில் தங்கி இருந்த அனைத்து பெண்களும் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தினர். 3000க்கும் மேற்பட்ட பெண்கள் சென்னை – பெங்களூரு சாலையில் திடீரென இறங்கி போராட்டம் நடத்தியதால் சென்னை பெங்களூர் செல்லும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் சிக்கலாகி என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து போராட்டம் செய்த பெண்கள் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் இறுதியில் விடுதி நிர்வாகத்திடம் பேசி முறையாக உணவு அளிக்க உறுதி செய்து தருவதாக காவல்துறையினர் கூறினர். இருப்பினும் பெண்கள் உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி தொடர்ந்து போராட்டம் செய்து வருவதால் சென்னை – பெங்களூர் சாலையில் போக்குவரத்து இயல்பு நிலை திரும்பாமல் உள்ளது.
இந்த நிலையில் இந்த போராட்டம் காரணமாக அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.