உலகம்
பெண்களுக்கு எதுக்கு அமைச்சர் பதவி? குழந்தை பெற்றால் போதும்: தாலிபான்கள்
பெண்களுக்கு அமைச்சர் பதவி என்பது கூடுதல் சுமை என்றும் அவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டு நிம்மதியாக இருக்கட்டும் என்றும் தாலிபான்கள் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சமீபத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டை ஆக்கிரமித்த தாலிபான்கள் புதிய அரசை அமைத்துள்ளனர். இந்த அரசின் அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லை என திட்டவட்டமாக தாலிபான்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் தாலிபான்கள் செய்தி தொடர்பாளர் செய்தியாளர்களை சந்தித்தபோது ’ஆப்கானிஸ்தானில் பெண்கள் அமைச்சர்களாக வேண்டிய அவசியம் இல்லை என்றும், அமைச்சர் பதவி பெண்களுக்கு கொடுத்தால் அது அவர்களுக்கு தாங்க முடியாத சுமை என்றும் கூறினார். மேலும் பெண்கள் குழந்தை பெற்றுக் கொண்டு நிம்மதியாக இருக்கட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பேட்டி உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது
ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்களுக்கு விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்வது உள்பட பல உரிமைகள் மறுக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து தற்போது பெண்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து கருத்து கூறிய தாலிபான்கள் செய்தி தொடர்பாளர் ’தற்போது போராட்டம் நடத்துபவர்கள் பெண்களின் ஒட்டுமொத்த பிரதிநிதிகளாக கருத முடியாது என்றும் ஒரு சிலர் மட்டுமே போராட்டம் நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்கலாம் என்றும் ஆனால் அதே நேரத்தில் அரசியல், பத்திரிகை, போன்ற துறைகளில் அவர்கள் பங்கேற்க முடியாது என்றும் தாலிபான்கள் பிற்போக்குத்தனமான அறிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது
ஆனால் அதே நேரத்தில் தாலிபான்களின் இந்த செயலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவிக்காமல் வேடிக்கை பார்த்து வருவதாக ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் உரிமை கழகம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. உடனடியாக ஐநா இதில் தலையிட்டு ஆப்கனில் உள்ள பெண்களுக்கு சுதந்திரம் பெற்றுத் தர வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் எழுப்பி வருகின்றனர்