இந்தியா
பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த மத்திய குழு பரிந்துரை!
பெண்களுக்கான திருமண வயதை 18 இலிருந்து 21 ஆக உயர்த்த மத்திய ஆய்வு குழு பரிந்துரை செய்துள்ளது.
பெண் குழந்தைகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில் கடந்த 1930 ஆம் ஆண்டு பெண்கள், ஆண்களுக்கான திருமண வயதை இந்திய அரசாங்கம் சாராதா சட்டம் இயற்றியது. அதன்படி, பெண்களுக்கு 14 வயது என்றும், ஆண்களுக்கு 16 வயது என்றும் திருமண வயது நிர்ணயிக்கப்பட்டது. பின்னர், அந்தச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு பெண்களுக்கான திருமண வயது 18 என்றும் ஆண்களுக்கான திருமண வயது 21 என்றும் உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில், கடந்தாண்டு சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி, இளம்பெண்கள் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் பொருட்டாக, அவர்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றார்.
அதன்படி, சமதா கட்சியின் முன்னாள் தலைவர் ஜெயா ஜெட்லி, நித்தி ஆயோக் உறுப்பினர், வி.கே.பால் ஆகியோர் தலைமையில் 10 பேர் கொண்ட ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. அந்த ஆய்வுக்குழு பலதரப்பட்ட தரவுகள் மற்றும் ஆய்வுகளை நடத்தி பிரதம அலுவலகத்துக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. அதில் பெண்களின் திருமண வயதை 18 இலிருந்து 21 ஆக உயர்த்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.