சினிமா செய்திகள்
ஷாருக்கான் என்னை ஏமாற்றிவிட்டார்: வழக்கு தொடர்ந்த பெண்ணுக்கு ரூ.15 ஆயிரம் நஷ்ட ஈடு!
ஷாருக்கான் படத்தை பார்த்து நான் ஏமாந்து விட்டேன் என்று வழக்கு தொடர்ந்த பெண்ணுக்கு ரூபாய் 15,000 நஷ்ட ஈடு கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஷாருக்கான் நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஃபேன். இந்த திரைப்படத்தின் ட்ரெய்லரில் ஒரு பாடல் இடம்பெற்றிருந்தது. இந்த பாடலை டிரைலரில் பார்த்த பாத்திமா என்ற பெண், அந்த பாடல் தனது குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும் என்பதால் அந்த பாடலை திரையரங்கில் பார்ப்பதற்காக படம் ரிலீஸ் ஆன உடன் திரையரங்கிற்கு சென்றார். ஆனால் அந்த பாடல் படத்தில் இல்லை என்றவுடன் கடும் அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து அவர் தானும் தன்னுடைய குழந்தைகளும் மிகவும் ஆவலுடன் அந்த பாடலை பார்க்க திரையரங்கம் சென்றோம் என்றும், ஆனால் அந்த பாடல் படத்தில் இடம் பெறவில்லை என்றும் எனவே படக்குழுவினர் தனக்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் இந்த வழக்கை விசாரித்து சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு 15,000 நஷ்ட ஈடு தர வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில்தான் ஃபேன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் யாஷ் ராஜ் பிலிம்ஸ் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மேல்முறையிட்டு வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரூபாய் 15,000 நஷ்ட ஈடு தர வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.
ஆனால் அதே நேரத்தில் படத்தயாரிப்பு நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் ட்ரெய்லரில் இருப்பதை ஏன் படத்தில் கொண்டு வரவில்லை என்றும் ட்ரெய்லரை பார்த்து ரசிகர்கள் ஏமாந்து விடுவார்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் இந்த வழக்கு விரைவில் அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.