தமிழ்நாடு
கடனை திருப்பி கேட்ட நபரை ஆபாச படமெடுத்து மிரட்டிய பெண்கள் கைது: சென்னையில் பரபரப்பு!
![arrested - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/04/arrested.jpg)
கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட நபரை ஆபாச படமெடுத்து மிரட்டிய 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த 60 வயதான ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவர் தனது வீட்டில் குடியிருந்த பெண் ராதா என்பவருக்கு மூன்று லட்சம் கடன் கொடுத்துள்ளார். மேலும் கொஞ்சம் கொஞ்சமாக 10 லட்சம் வரை கடன் வாங்கிய ராதா, ஒரு கட்டத்தில் வீட்டை காலி செய்துவிட்டார் .
இந்த நிலையில் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடித்து வந்த ராதா மீது பேராசிரியர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கிற்கும் ராதா ஆஜர் ஆகாத நிலையில் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேராசிரியரை தொடர்பு கொண்ட ராதா, உங்கள் பணத்தை திருப்பி கொடுக்கவுள்ளதாகவும், நான் கூறும் இடத்திற்கு வாருங்கள் என்று தனது தோழி லட்சுமி வீட்டிற்கு வரவழைத்தார். அதன்பிறகு அவருக்கு குடிக்க குளிர்பானம் கொடுத்துள்ளார். குளிர்பானம் குடித்த சிறிது நேரத்தில் பேராசிரியர் மயக்கமடைந்த நிலையில் அந்த பேராசிரியருடன் தோழி லட்சுமி தனிமையில் இருப்பது போன்ற ஆபாச வீடியோ எடுத்துள்ளனர்.
மயக்கம் தெளிந்து எழுந்த பேராசிரியரை அந்த ஆபாச படத்தை காட்டி கடனை திருப்பி கேட்க கூடாது என்றும் புகார் வாபஸ் பெற வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். இதனை அடுத்து பேராசிரியர் மீண்டும் போலீசாரிடம் மிரட்டியது குறித்து புகார் அளித்த நிலையில் ஆபாச படம் மிரட்டிய ராதா, லட்சுமி மற்றும் அவரது தோழிகள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.