தமிழ்நாடு
கல்லூரி மாணவிகளுக்கு கருக்கலைப்பு மாத்திரைகளை விற்ற பெண் பட்டதாரி கைது!
கல்லூரி மாணவிகளுக்கு கருக்கலைப்பு மாத்திரைகள் விற்ற பொறியியல் பட்டதாரி ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கோடம்பாக்கம் பகுதியில் போதைப் பொருள் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகள் மாணவிகளிடம் விற்கப்படுவதாக ரகசிய தகவல் போலீசாருக்கு வந்த நிலையில் இதுகுறித்து போலீசார் விசாரணை செய்தனர்.
அப்போது ராஜேஸ்வரி என்பவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு அவரை போலீசார் விசாரித்தனர். அவரிடம் விசாரணை செய்ததில் அவர் ஒரு பொறியியல் பட்டதாரி என்றும், கல்லூரி மாணவிகளுக்கு போதை மாத்திரைகள் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்வதில் முக்கிய நபராக செயல்பட்டு வந்தது என்றும் தெரிய வந்தது.
பப்ஜி விளையாட்டில் அறிமுகமான நபர்கள் உள்ளிட்டோர் உடன் இணைந்து டெல்லியிலிருந்து கருக்கலைப்பு மற்றும் போதை மாத்திரைகளை அவர் வரவழைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சமூகவலைதளங்கள் மூலம் வாடிக்கையாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு அதிக விலையில் கருக்கலைப்பு மாத்திரைகளை விற்று வந்ததாக விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் கூறினர். இதனை அடுத்து ராஜேஸ்வரி மற்றும் அவருக்கு உதவியாக இருந்த 3 பேர் என மொத்தம் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.