இந்தியா
பெண்ணுக்கு ஒரே நாளில் மூன்று கொரோனா தடுப்பூசி- அதிர்ச்சி சம்பவம்!
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒரே நாளில் மூன்று முறை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டு உள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், தானே பகுதியில் 28 வயதுப் பெண் ஒருவர், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தானே மாநகராட்சி நடத்தும் முகாமுக்குச் சென்றுள்ளதாக தெரிகிறது. அங்கே அவருக்கு முதலில் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. பின்னர் யாரும் அவரை ஊசி போட்ட இடத்தில் இருந்து நகரச் சொல்லவில்லையாம். இதனால் தொடர்ந்து இரண்டு டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக அந்தப் பெண் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டை தானே மாநகராட்சி நிர்வாகம் மறுத்துள்ளது. அதே நேரத்தில் இது குறித்து விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
தனக்கு மூன்று டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக சொன்னப் பெண்ணின் உடல் நலம் சற்று பாதிக்கப்பட்டதால் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தற்போது அவர் உடல்நிலை தேறியுள்ளதாகவும், இதனால் எந்தப் புகாரும் தெரிவிக்கப் போவதில்லை என்றும் பெண்ணின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். இருப்பினும் பல தரப்பினர் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.