இந்தியா
சூனியம் எடுப்பதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மந்திரவாதி கையும் களவுமாக பிடிபட்டார்!
கேரளாவில் மந்திரவாதி ஒருவர் சிறுமிக்கு சூனியம் இருப்பதாக சிறுமியின் தந்தையிடம் கூறி சிறுமியை காட்டுக்குள் அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது அவர் கையும் களவுமாக பிடிபட்டார். இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஒரு மலைவாழ் பகுதியில் கூலி வேலை செய்யும் ஒருவரது மகளுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. இதனால் அடிக்கடி தலைவலி வருவதும் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதுமாக இருந்துள்ளனர். ஆனால் தலைவலி தீராமல் அடிக்கடி வந்ததால் தலைவலிக்கு காரணம் வேறு ஏதாவதாக இருக்கும் என அஞ்சினார் சிறுமியின் தந்தை.
பெரிய மருத்துவமனைக்கு கொண்டு சென்று வைத்தியம் பார்க்க வசதியில்லாததால் அந்த ஊரில் மந்திராவதம், பில்லி, சூனியம் எடுப்பவரான ருபேஷ் என்பவரை சந்தித்து தனது மகளுக்கு உள்ள பிரச்சனை குறித்து கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமிக்கு சூனியம் இருப்பதாகவும், அதனை எடுத்துவிட்டால் சரியாகிவிடும் என்றும் கூறியுள்ளார் ருபேஷ்.
இதனை கேட்ட சிறுமியின் தந்தை சிறுமிக்கு சூனியம் எடுப்பதற்கு ருபேஷிடம் அழைத்து சென்றுள்ளார். சிறுமியை பார்த்ததும் ருபேஷ் தனியாக வைத்து பூஜை செய்ய வேண்டும் எனக்கூறி காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு யாரும் இல்லாததால் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார் ருபேஷ். இதனையடுத்து சிறுமி சத்தமாக கத்தியுள்ளார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவர ருபேஷ் பாலியல் தொல்லை கொடுத்ததை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
பின்னர் அவர்கள் பாலியல் தொல்லை கொடுத்த மந்திரவாதி ருபேஷை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் ருபேஷ் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். தந்தையின் மூடநம்பிக்கையால் சிறுமி மந்திரவாதியால் சீரழிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.