தமிழ்நாடு
முத்தரப்பு பேச்சுவார்த்தை: முடிவுக்கு வருமா பேருந்து ஸ்டிரைக்?
புதிய ஊதிய ஒப்பந்தம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் பேருந்து போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.
இன்று மூன்றாவது நாளாக இந்த வேலைநிறுத்தம் நடைபெற்று வருவதால் பேருந்துகள் மிகக் குறைந்த அளவே இயங்கி வருகின்றன என்பதும் இதனால் பொதுமக்கள் அவதியுற்று உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் கமிஷனர் அலுவலகத்தில் இன்று மாலை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகவும் இந்த பேச்சுவார்த்தையில் அரசுக்கும் போக்குவரத்து தொழிலாளர்கள் இடையே உடன்பாடு ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் புதிய ஊதிய ஒப்பந்தம் முடிவாகும் வரை இந்த மாதம் முதல் ரூபாய் 1000 இடைக்கால நிவாரணம் வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளதால் பேச்சுவார்த்தையில் இன்று உடன்பாடு ஏற்பட்டு நாளை முதல் பேருந்துகள் ஓடத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் எந்தவித அறிவிப்பையும் வெளியிட முடியாது என்பதை கணக்கில் கொண்டு வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர தொழிற்சங்கத்தினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.