தமிழ்நாடு
பாஜகவில் இணைகிறாரா ஓபிஎஸ்: செய்தியாளர்கள் கேள்வியால் திணறல்!
![OPS 1 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/04/OPS-1.jpg)
பாஜக பேரணியில் கலந்துகொள்வதற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் காசி சென்றது தமிழக அரசியலில் பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனை வைத்து அவர் பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் உலா வருகின்றன.
இது தொடர்பாக பேசிய அமமுக முக்கிய தலைவர் தங்க தமிழ்செல்வன், ஓ.பன்னீர்செல்வம் பாஜகவோடு தொடர்பில் இருப்பதால்தான் முதல்வர் பதவியில் இருந்தே அவரை மாத்தினோம். இப்ப காசி போனதன் மூலமா அதை நிரூபிச்சிட்டார். மோடியின் அடிமை என்பதை அவரே ஒத்துக்கிட்டார். பாஜகவில் இணையப்போறதா கூடசெய்திகள் வருது என கூறினார்.
இந்நிலையில் திருமங்கலத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் காசி பயணம் தொடர்பாக தொடர் கேள்விகளை எழுப்பி திணறடித்தனர். காசி பயணம் என்பது நீங்கள் பாஜகவில் சேர்வதற்கான ஏற்பாடுகளுக்காக போனதா என்று கேள்வி எழுப்பினார் நிரூபர் ஒருவர். இந்த கேள்வியால் கோபமடைந்த ஓ.பன்னீர்செல்வம் நிரூபர் கேள்வி கேட்டு முடிப்பதற்குள் கொந்தளித்தார்.
முட்டாள்தனமான கருத்து. அடிமுட்டாள் தனமான கருத்து என்று மறுத்தார். எப்போதும் மென்மையாக பேசும் ஓ.பன்னீர் செல்வத்தின் குரலில் கொஞ்சம் கோபம் தெரிந்தது. மேலும் தொடர்ந்து இது தொடர்பான கேள்விகளை நிரூபர்கள் கேட்க ஓபிஎஸ் உடன் இருந்த கே.பி. முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் முந்திக்கொண்டு செய்தியாளர்கள் மீது பாய்ந்தனர்.