தமிழ்நாடு
“இந்த தேர்தல்ல மட்டும் ஜெயிச்சிட்டோம்… எதிரிகளே இருக்க மாட்டாங்க…”- எடப்பாடி பழனிசாமி பேச்சு
தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இன்னும் ஒரு மாத காலமே தேர்தலுக்கு முன்னர் இருப்பதனால் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
ஒரு பக்கம் பரப்புரைக் கூட்டங்களில் கவனம் செலுத்தி வரும் அரசியல் கட்சிகள், இன்னொரு பக்கம் கூட்டணி காய் நகர்த்தல்களையும் தொகுதிப் பங்கீடுகளையும் செய்து வருகின்றனர். வரும் நாட்களில் கூட்டணி மாற்றங்கள், கட்சித் தாவல்கள் அதிகம் நடக்கலாம் எனத் தெரிகிறது.
இந்நிலையில் இன்று அதிமுகவில் விருப்ப மனு அளித்தவர்களிடம் ஒரே நாளில் நேர்காணல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதிமுகவில் சுமார் 8,200 பேர் விருப்ப மனு அளித்திருந்தனர். இதில், தங்களுக்காக விருப்ப மனு அளித்தவர்களை அதிமுக தலைமைக் கழகம் நேர்காணலுக்கு அழைத்திருந்தது.
காலை 9 மணி முதல் இந்த நேர்காணல் நடைபெற்று வருகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், 9 பேர் கொண்ட குழுவின் முன்னிலையில், நேர்காணல் நடைபெற்றது.
அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “அனைத்துத் திட்டங்களையும் நிறைவேற்றி, மக்களின் மதிப்பை நாம் பெற்றிருக்கிறோம். அதிமுக ஆட்சியை சிறந்த ஆட்சியாக மக்கள் கருதுகின்றனர். இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். இந்த தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால்… நிச்சயமாக வெற்றி பெற்றுவிடுவோம். அப்படி வெற்றி பெற்றுவிட்டால், அதிமுகவை எதிர்க்கக்கூடிய சக்தி எந்த கட்சிக்கும் இல்லை” என்று அதிரடியாக பேசினார்.