தமிழ்நாடு
‘தமிழ்நாட்டை உலகமே திரும்பி பார்க்கவைப்பேன்!’- கமல் சொல்லும் திட்டம்
தமிழகத்திற்குத் தான் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால், நிச்சயம் உலகமே திரும்பி பார்க்கும் வகையில் செயல்படுவேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
கமல், எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி வைத்து இத்தேர்தலை சந்திக்கிறார். மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு வளரவில்லை என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் கமல் உட்பட மய்யத்தின் முக்கிய பிரமுகர்கள் சிலர் வெற்றி பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது.
‘எந்தச் சுமையையும் தாங்குவேன் தமிழ்நாட்டிற்காக. நான் பெற்ற அனுபவம், நான் பெற்ற நட்பு, நான் பெற்ற அறிவு, நான் பெற்ற வெளிநாட்டுத் தொடர்புகள், எனக்குத் தெரிந்த தொழில்நுட்பம் உள்ளிட்டவைகளை வைத்துத் தமிழகத்தை உலகமே திரும்பிப் பார்க்க வைப்பேன்.
அதில் பெரும் பங்கு உங்களுக்கு இருக்கிறது. நாங்கள் இங்கு ஆளும் பொறுப்புக்கு வந்தால் மட்டும் தான், எனக்குத் தெரிந்த விஷயங்களை செய்ய முடியும்’ என்று பரப்புரை செய்தார்.