தமிழ்நாடு

‘வாய்ப்பு கொடுத்தால் ரஜினியுடன் நடிப்பேன்!’ – மு.க.அழகிரி கலகல பேச்சு

Published

on

தனக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டால் ரஜினியுடன் இணைந்து நடிப்பேன் என்று கூறியுள்ளார் மு.க.அழகிரி. ரஜினி தொடங்கப் போகும் புதிய கட்சியில் அழகிரி இணைய வாய்ப்புள்ளதாக பரபரக்கப்பட்டு வரும் நிலையில், அவர் இப்படியொரு கருத்தைக் கூறியுள்ளார்.

திமுகவிலிருந்து ஓரங்கட்டப்பட்ட அழகிரி, அரசியலில் இருந்து முழுவதுமாக விலகாமல், அவ்வப்போது சலசலப்பை ஏற்படுத்தும் கருத்துகளை கூறி வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் அழகிரி, ‘எனது அரசியல் நகர்வுகள் குறித்து ஆலோசகர்கள் மற்றும் ஆதரவாளர்களைக் கேட்டுத்தான் முடிவெடுப்பேன். புதிய கட்சித் தொடங்குவது குறித்து போகப் போக உங்களுக்குத் தெரியும். எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் எனது பங்கு இருக்கும்’ என்று சூசகமாக பேசினார். திமுக வட்டாரத்தில் இந்தப் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மீண்டும், மதுரையில் செய்தியாளர்கள் மத்தியில், ‘தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும் என்பது உறுதி. அது எப்படியான பங்களிப்பு என்பது உங்களுக்குப் போகப் போகத் தெரியும். தேர்தலில் ஓட்டு போடுவது ஒரு பங்களிப்புதான். புதிய கட்சி ஆரம்பிப்பது கூட ஒரு பங்களிப்புதான். எதாவது ஒரு கட்சியில் சேர்வது கூட ஒரு பங்களிப்புதான்’ என்று சூசகமாக பேசினார். தொடர்ந்து செய்தியாளர்கள், ‘ரஜினி ஆரம்பிக்கும் புதிய கட்சியில் இணைய வாய்ப்புள்ளதா?’ எனக் கேட்டனர்.

அதற்கு அழகிரி, ‘எனது நெருங்கிய நண்பர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சி. அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறேன். நேரடியாகவே எனது பாராட்டுகளை அவரிடம் கூறியுள்ளேன். அதே நேரத்தில் ரஜினியின் கட்சியில் இணைவேனா என்பது குறித்து உங்களுக்குப் போகப் போகத் தெரியும். வாய்ப்பு கொடுக்கப்பட்டால் ரஜினியுடன் இணைந்து திரைப்படத்தில் நடிக்கலாம்’ என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்.

seithichurul

Trending

Exit mobile version