தமிழ்நாடு
வாலிபருடன் தொடர்பு: தட்டிக்கேட்ட கணவரை அரிவாள்மனையால் வெட்டிய மனைவி!
சென்னை மயிலாப்பூரை சேர்ந்த 49 வயதான செல்வராகவன் என்பவர் தினக்கூலி வேலைக்கு செல்கிறார். அவரது மனைவி 30 வயதான சுந்தரி சில வீடுகளில் வீட்டு வேலைகள் செய்து வருகிறார். செல்வராகவன் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்.
இவர் கடந்த திங்கள் கிழமை மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவரது மனைவி சுந்தரி பல மணி நேரமாக செல்போனில் ஒரு ஆணுடன் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார். இதனால் கோபமடைந்த செல்வராகவன் இவ்வளவு நேரமாக யாரிடம் பேசிட்டு இருக்க என மனைவியை கண்டித்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட ஆத்திரம் அடைந்த மனைவி அருகில் இருந்த அரிவாள்மனையை எடுத்து கணவரின் நெற்றி மற்றும் இடது கையில் வெட்டியுள்ளார். இதனையடுத்து வலியால் அலறி துடித்த செல்வராகவனை அருகில் உள்ளவர்கள் வந்து மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் செல்வராகவன் தனது மனைவி மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தனது மனைவி செல்போனில் அதிக நேரம் வேறு ஒரு ஆணுடன் பேசியதாகவும், வேலை செய்யும் இடத்தில் ஒரு வாலிபருடன் தொடர்பு வைத்திருப்பதாகவும், இதை தட்டிக்கேட்ட தன்னை அரிவாள்மனையால் வெட்டியதாகவும் தெரிவித்துள்ளார். இதனை போலீசார் விசாரித்து வருகின்றனர்.