தமிழ்நாடு
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் ஏன்? என்னென்ன கோரிக்கைகள்?
![bus strike - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/02/bus-strike.jpg)
தமிழகம் முழுவதும் இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் ஆரம்பமாகி உள்ளதால் ஒருபக்கம் பயணிகள் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டு இருந்தாலும் இன்னொரு பக்கம் தொழிலாளர்கள் தங்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்காக வேலைநிறுத்தம் செய்வதாகவும், இதனால் பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் சிரமங்களை பொருட்படுத்தாமல் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் என்ன? எதனால் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது? என்பதை பார்த்தோம். அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பதே போக்குவரத்து தொழிலாளர்களின் முதல் கோரிக்கையாக உள்ளது.
மேலும் ஊதிய உயர்வு ஒப்பந்தம் முடிந்து 18 மாதங்கள் ஆன நிலையில் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் என்றும் அதற்கான பேச்சுவார்த்தைகளுக்காக தொழிற்சங்கங்களை அழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
போக்குவரத்து கழகத்தின் வருவாய் மற்றும் செலவு இடைவெளியை குறைக்க அரசு சரியான அளவில் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பேருந்தில் ஏற்படும் இழப்புகளை சரி செய்ய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.
ஐந்தாவதாக முக்கிய கோரிக்கையாக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணப்பலன் உடனடியாக வழங்க வேண்டும் என்றும் மற்ற அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி தான் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உடனடியாக அரசு இதில் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி ஒரு சில கோரிக்கைகளை நிறைவேற்றி வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது