தமிழ்நாடு
விநாயகர் சதுர்த்தி கட்டுப்பாட்டுக்கு கேரளாவே காரணம்: முதல்வர் ஸ்டாலின் பதில்!
தமிழகத்தில் செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் விநாயகர் சிலைகளை பொதுவெளியில் வைக்க மற்றும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்க தமிழக அரசு தடை விதித்தது.
தமிழக அரசின் இந்த தடைக்கு பாஜக உள்பட ஒருசில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பதும் நிபந்தனைகளுடன் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இதுகுறித்து பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அவர்கள் சட்டப்பேரவையில் இன்று கோரிக்கை ஒன்றை வைத்தார். விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கான கட்டுப்பாடுகளை நீக்குமாறு அவர் விடுத்த கோரிக்கைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்தார்.
ஓணம் மற்றும் பக்ரீத் ஆகிய பண்டிகையின் போது ஏற்பட்ட தளர்வுகளால் தான் கேரளாவில் கொரோனா அதிகரித்ததை கவனத்தில் கொண்டே தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாகவும் கொரோனா தொற்று முழுமையாக கட்டுக்குள் வராததால் மக்களை பாதுகாக்கவே இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் விநாயகர் சதுர்த்தியை பொது இடத்தில் கொண்டாட மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் வீடுகளில் தாராளமாகக் கொண்டாடலாம் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.