தமிழ்நாடு
கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு தாமதமாவது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!
கூட்டுறவு நகைக்கடன் மற்றும் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்ய தாமதம் செய்யப்படுவது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று சட்டமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக பட்ஜெட் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று முதல் நான்கு நாட்களுக்கு நடைபெறுகிறது என்பது அறிவிப்பு வந்ததை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இன்று நடந்த விவாதத்தின் போது முன்னாள் அதிமுக அமைச்சர் உதயகுமார் அவர்கள் நகை கடன் தள்ளுபடி மற்றும் பயிர் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு ஏதும் இல்லாதது ஏன் என்றும், நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு தாமதமாவது ஏன் என்ற கேள்வியை எழுப்பினார்.
இதற்கு பதில் கூறிய முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் இருந்து நாங்கள் என்றைக்கும் பின்வாங்க மாட்டோம் என்றும், விவசாய கடன் மற்றும் நகை கடன் தள்ளுபடி குறித்த சந்தேகம் தேவையில்லை என்றும், கண்டிப்பாக அந்த அறிவிப்பு வரும் என்று கூறினார்.
நகை கடன் தள்ளுபடி தாமதமாவது ஏனெனில் அதில் பல முறைகேடுகள் நடந்துள்ளது என்றும் விவசாய பயிர் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை கணக்கு போட்டுப் பார்த்தபோது பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும், அவற்றை சரி செய்து விட்டு அதன் பின்னர் தள்ளுபடி அறிவிப்புகள் வெளியாகும் என்று உறுதியாக கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் பயிர்கள் மற்றும் நகை கடன் தள்ளுபடியில் எங்கெங்கு முறைகேடு நடைபெற்று உள்ளன என்பது குறித்து அந்தந்த துறையின் அமைச்சர்கள் விவாதத்தின்போது கூறுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக கொடுத்த பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் அதுகுறித்து பட்டியலிட்டால் பெரிய லிஸ்டே வரும் என்றும் ஆனால் திமுக ஆட்சியில் கண்டிப்பாக நாங்கள் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என்றும் அதுதான் எங்கள் லட்சியம் அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் என்றும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் மேலும் கூறினார்.