தமிழ்நாடு
ஜெயலலிதா சிகிச்சையின்போது சிசிடிவி கேமிராக்கள் அகற்றப்பட்டது ஏன்? அப்பல்லோ விளக்கம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரது வார்டு உள்பட மருத்துவமனையின் பல பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டது ஏன் என்பது குறித்து அப்பல்லோ நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் விளக்கம் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை செய்வதற்காக கடந்த சில ஆண்டுகளாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை செய்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற போது அப்போலோ நிர்வாகம் தரப்பில் இருந்து வாதம் செய்யப்பட்டது.
அப்போதைய தமிழக அரசு கூறியதால்தான் ஜெயலலிதா சிகிச்சை பெறும் அறையில் சிசிடிவி கேமராக்கள் இருந்து அகற்றப்பட்டது என்றும் ஆறுமுகசாமி ஆணையம் மீது நம்பிக்கை இல்லாததால் மருத்துவர்கள் விசாரணைக்கு செல்ல விரும்பவில்லை என்றும் மருத்துவர்கள் அடங்கிய குழு முன்பு விசாரணைக்கு செல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று உச்சநீதிமன்றத்தில் அப்பல்லோ நிர்வாகம் பதிலளித்துள்ளது.
ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவருக்கு பிரவேசி தேவைப்படுவதாக அரசு கூறியதால் தான் சிசிடிவி அகற்றப்பட்டது என்று அப்பல்லோ மருத்துவமனை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்போதைய அரசு என்றால் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தான் அப்போது முதல்வராக இருந்தார் என்பதால் அவர்தான் சிசிடிவி கேமிராக்களை அகற்ற உத்தரவிட்டாரா என்பது குறித்த கேள்விகள் தற்போது எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதாவுக்கு தரப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவர் குழு உதவி இல்லாமல் ஆறுமுகச்சாமி ஆணையம் கருத்து தெரிவிக்க கூடாது என்றும்ம் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை ஒருதலைபட்சமாக இருப்பதாகவும் அப்பல்லோ குற்றஞ்சாட்டியுள்ளது.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து தொடர்ந்து ஊடகங்களில் தவறான கருத்துக்கள் பகிரப்பட்டு வருவதாகவும், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் தரம் குறித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு தெரிவித்த கருத்துக்களை போதுமானவை என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.