தமிழ்நாடு
“சசிகலா விலகலுக்கு அந்த ஒருவர்தான் காரணம்!”- ரகசியம் உடைத்த திவாகரன்
தமிழக அரசியல் தளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எண்ணப்பட்ட சசிகலா, அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்துள்ளார். இந்த அதிர்ச்சி சசிகலா ஆதரவாளர்களுக்கு மிகப் பெரும் ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது. இந்நிலையில், அவரின் சகோதரர் திவாகரன், ‘சசிகலாவின் விலகலுக்கு யார் காரணம்?’ என்பது குறித்த ரகசியத்தை வெளியிட்டிருக்கிறார்.
‘நம்முடைய பொது எதிரி, தீய சக்தி என்று அம்மா நமக்கு காட்டிய திமுகவை ஆட்சியில் அமரவிடாமல் தடுத்து விவேகமாக இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட அம்மாவின் தொண்டர்கள் பாடுபட வேண்டும்’ என்று அறிக்கை வெளியிட்டு தன் அரசியல் ஒதுங்குதலை அறிவித்துள்ளார் சசிகலா.
இந்நிலையில் இதுகுறித்து சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறும்போது,
”இதற்கு ஒரே காரணம்தான். எங்கள் குடும்பத்தில் உள்ள சிலர்தான் இதற்குக் காரணம். தானே ராஜா, தானே முதல் மந்திரி என்று ஒருவர் சுற்றிக் கொண்டிருக்கிறார். தினகரன் கையில்தான் சசிகலா இருந்தார். சசிகலா மீது மறைமுகமாக அழுத்தம் கொடுக்கிறார்.
சசிகலாவை வெளியேற்றி அந்த இடத்துக்குத் தான் வந்துவிட வேண்டும் என்று நீண்ட நாட்களாகத் திட்டமிட்டிருந்தார். அதைத் தற்போது நிறைவேற்றி இருக்கிறார். அவர் தன்னுடைய முடிவை சசிகலா மீது திணித்து, அரசியலை விட்டு விலகச் செய்திருக்கிறார். அவரே தன்னை முதல்வர் வேட்பாளர் என்று கூறிக் கொண்டிருக்கிறார். திடீரென அமமுகவுடன் அதிமுக சேர்ந்தால் இணைத்துக்கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.
சசிகலா எடுத்திருப்பது நல்ல முடிவு, ஏனெனில் துரோகிகள் மீண்டும் மீண்டும் அவரை பலிகடா ஆக்கிவிடுவர். அதில் இருந்து சசிகலா தப்பித்து விட்டதாகத்தான் நினைக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.