பர்சனல் ஃபினான்ஸ்
செல்வ மகள் திட்டம் v/s பிபிஎப் | பெண் குழந்தைகளுக்கு ஏற்ற முதலீட்டு திட்டம் எது?
இந்தியாவில் பெண் குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்களுக்குச் செலவு அதிகமாக இருக்கும் என்று கூறுவார்கள். இப்படி பெண் குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்கள் சரியான முதலீட்டு திட்டங்களில் பணத்தை முதலீடு செய்தால், அவர்களின் எதிர்காலம் பற்றிய கவலை இருக்காது. பெண் குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்றவற்றுக்கு ஏற்ற பல முதலீட்டு திட்டங்கள் பயன்பாட்டிலிருந்தாலும், மத்திய அரசின் சிறு சேமிப்பு திட்டம் கீழ் செயல்பட்டு வரும் சுகன்யா சம்ரிதி யோஜனா (செல்வ மகள் திட்டம்) மற்றும் பிபிஎப் என அழைக்கப்படும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டங்கள் பார்க்கப்படுகின்றன.
செல்வ மகள் திட்டம் மற்றும் பிபிஎப் முதலீட்டுத் திட்டங்களில் பெண் குழந்தைகளுக்கு ஏற்ற திட்டங்கள் எவை என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
பிபிஎப் – பொது வருங்கால வைப்பு நிதி
சிறு சேமிப்பு திட்டங்களில் அதிக வட்டி விகித லாபம் அளிக்கும் திட்டங்களில் ஒன்று பிபிஎப். பிபிஎப் திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு வருமான வரி விலக்கும் அளிக்கப்படும்.
பிபிஎப் திட்டத்தில் ஆண்டுக்குக் குறைந்தது 500 ரூபாய் முதல் 1.5 லட்சம் ரூபாய் வரை என 25 வருடம் முதலீடு செய்யலாம். தேவைப்பட்டால் கூடுதலாக 5 வருடங்கள் என முதலீட்டை நீட்டிக்கலாம். ஆண்டுக்கு ஒரு முறை அல்லது 12 தவணையாகவும் முதலீடு செய்ய முடியும். ஒவ்வொரு காலாண்டுக்கு ஒரு முறை இந்த வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்படும். 2020-2021 நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான கடைசி காலாண்டில் பிபிஎப் திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு 7.1 சதவீத லாபத்தை அளிக்கிறது.
செல்வ மகள் திட்டம் – சுகன்யா சம்ரிதி யோஜனா
2015-ம் ஆண்டு பெண் குழந்தைகளுக்கான சிறப்பு சேமிப்பு திட்டமாக அறிமுகம் செய்ததே சுகன்யா சம்ரிதி யோஜனா என அழைக்கப்படும் செல்வ மகள் திட்டம். இந்த திட்டத்தின் 10 வயதுக்குள் உள்ள பெண் குழந்தைகளுக்குச் சேமிப்பு திட்டத்தைத் தொடங்க முடியும். குழந்தையின் வயது 18 ஆன பிறகு அந்த பெண் குழந்தையே அந்த கணக்கை நிர்வகிக்கலாம். பெண் குழந்தையின் வயது 21 ஆகும் போது இந்த கணக்கு முதிர்வடையும். தற்போது இதில் முதலீடு செய்யும் போது 7.6 சதவீத லாபம் அளிக்கப்படுகிறது. கொரோனா பிரச்சனைகள் முடிந்தால் 8.4 சதவீதம் வரை வட்டி விகிதம் உயர வாய்ப்புகள் உண்டு. குறைந்தது ஆண்டுக்கு 250 ரூபாய் முதல் 1.50 லட்சம் ரூபாய் வரையில் முதலீடு செய்யலாம்.
பிபிஎப் – செல்வ மகள் திட்டம் இரண்டில் சிறந்தது எது?
வட்டி விகிதத்துடன் ஒப்பிட்டால் பிபிஎப்-ஐ விட செல்வ மகள் திட்டத்தில் வட்டி அதிகம். எனவே லாபம் அதிகமாகக் கிடைக்கும். பெண் குழந்தைகளுக்காக முதலீடு செய்யும் போது ஒரு திட்டம் என்று இல்லாமல் ஒன்றுக்கு மேற்பட்ட திட்டங்களில் முதலீடு செய்வதுதான் சிறந்தது என வல்லுநர்கள் கூறுகின்றார்கள். எனவே செல்வ மகள் மட்டுமல்லாமல் பிபிஎப் திட்டத்திலும் பணத்தைப் பிரித்து முதலீடு செய்யலாம். பிபிஎப்-ல் 15 வருடம் வரை முதலீடு செய்து முதிர்வையும் போது அதை எடுத்து பிற திட்டங்களில் முதலீடு செய்யலாம். பிபிஎப், செல்வ மகள் திட்டம் மட்டுமல்லாமல் நல்ல லாபம் அளிக்கும் கடன் திட்டங்கள், மியூச்சுசல் ஃபண்டு போன்றவற்றிலும் பிரித்து முதலீடு செய்யலாம்.