இந்தியா
வாட்ஸ்அப் பே செயலியின் இந்திய தலைவர் ராஜினாமா.. நான்கே மாதங்களில் வெளியேற என்ன காரணம்?
வாட்ஸ்அப் பே செயலியின் இந்திய தலைவர் கடந்த செப்டம்பர் மாதம் பதவி ஏற்ற நிலையில் திடீரென தற்போது நான்கே மாதங்களில் ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது இந்தியாவில் டிஜிட்டல் பண பரிமாற்றம் அதிகமாகி வருகிறது என்பதும் யூபிஐ மூலம் பல தனியார் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பணப்பரிமாற்ற சேவையை வழங்கி வருகிறது என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் வாட்ஸ்அப் செயலி என்பது வாட்ஸப் வாடிக்கையாளர்களுக்காக பண பரிமாற்றத்திற்காக செய்யப்பட்ட வசதி என்பதும், கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சேவையை மில்லியன் கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ் அப் பயனாளி ஒருவர் தனது காண்டாக்டில் உள்ள ஒருவருக்கு பணம் அனுப்ப வேண்டுமென்றால் இந்த வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி அனுப்பிக் கொள்ளலாம் என்றும் அதே காண்டாக்ட்டில் உள்ளவரிடமிருந்து பணம் பெற்றுக் கொள்ளும் வசதியும் உள்ளது என்றும் இது யூபிஐ அடிப்படையில் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் வாட்ஸ்ஆப் செயலியின் இந்திய தலைவராக வினய் சோலட்டி அவர்கள் பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்ற பிறகு வாட்ஸ் அப் செயலியை இந்தியாவில் விரைவாகப் மக்கள் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதும் குறிப்பாக பெங்களூர் மெட்ரோவில் க்யூஆர் மூலம் டிக்கெட் எடுக்கும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திடீரென வினய் சோலட்டி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் பதவியேற்ற அவர் நான்கே மாதங்களில் ராஜினாமா செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் வாட்ஸ்அப் இந்தியாவின் தலைவர் மனேஷ் மஹாத்மே ராஜினாமா செய்த நிலையில் தற்போது வாட்ஸ் அப் செயலியின் தலைவரும் ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ராஜினாமாவுக்குப் பிறகு வினய் சோலட்டி தனது லிங்க்ட் இன் பக்கத்தில் கூறியபோது, ‘இன்றுடன் நான் வாட்ஸ்அப் பே நிறுவனத்தில் இருந்து விடை பெறுகிறேன். இந்த நிறுவனத்தின் வளர்ச்சியை அருகிலிருந்து பார்த்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இது ஒரு சிறந்த அனுபவமாக எனக்கு இருந்தது. நான் இங்கு நிறைய கற்றுக்கொண்டேன். இந்த பயணம் மிகவும் அற்புதமானது. என்னால் முடிந்தவரை வாட்ஸ்அப் பே செயலி குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தினேன். வாடிக்கையாளர்கள் இந்த வசதியை பயன்படுத்தியதில் எனக்கும் ஒரு சிறு பங்கு உள்ளது என்பதை பெருமையுடன் கூறிக் கொள்வேன்’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் வாட்ஸ் அப் செயலியின் இந்திய தலைவர் வினய் சோலட்டி பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து என்ன திட்டம் வைத்திருக்கிறார் என்பது குறித்து தகவல் எதுவும் வெளிவரவில்லை. அதேபோல அவர் ராஜினாமா செய்ததற்கு என்ன காரணம் என்றும் கூறப்படவில்லை.