தமிழ்நாடு

ரகசியம் அறிந்த நிர்மல் குமார்… பயப்படும் அண்ணாமலை: விளாசிய கடம்பூர் ராஜூ!

Published

on

பாஜக முக்கிய நிர்வாகிகள் அந்த கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்ததையடுத்து இரு கட்சியினருக்குமான மோதல் போக்கு ஆரம்பித்துள்ளது. பாஜக இளைஞரணியினர் எடப்பாடி பழனிசாமியின் உருவபடத்தை எரித்த நிலையில் அதிமுகவின் கடம்பூர் ராஜூ அண்ணாமலையை விமர்சித்துள்ளார்.

#image_title

பாஜக ஐடி விங் தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார் பாஜகவில் இருந்து விலகி கூட்டணி கட்சியான அதிமுகவில் இணையும் போது பாஜக தலைவர் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து விமர்சித்தார். அவரை அதிமுக அரவணைத்துக்கொண்டது. இந்த அதிர்ச்சியில் இருந்து விடுபடுவதற்குள் பாஜக ஐடி விங் செயலாளர் திலீப் கண்ணனும், ஓ.பி.சி மாநிலச் செயலாளர் ஜோதியும் பாஜகவில் இருந்து விலகி சொல்லி வைத்தார்போல் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர்.

இதையடுத்து அண்ணாமலை, ஒவ்வொரு வினைக்கும் கண்டிப்பாக ஒரு எதிர்வினை இருக்கும் என எடப்பாடி பழனிசாமியை கடுமையாக எச்சரித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, கூட்டணி தர்மத்தை போற்றத் தவறிய துரோகி எடப்பாடி பழனிசாமியைக் கண்டிக்கிறோம் என கோவில்பட்டியில் பாஜக நிர்வாகிகள் போஸ்டர் ஒட்டியும், எடப்பாடி பழனிசாமி புகைப்படத்தை எரித்தும் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, நிர்மல் குமார் ஏதோ பிடிக்காமல் பாஜகவில் இருந்து அதிமுகவிற்கு வந்திருக்கிறார். இதற்கு அண்ணாமலை முதலில் எங்கு சென்றாலும் வாழ்க என்றார். அப்போது சரி அண்ணாமலையின் கருத்து நாகரீகமாக இருக்கிறதே, அரசியலில் அவர் பக்குவப்பட்டுவிட்டார் என்று நினைத்தோம். ஆனால், இன்றைக்கு அவர் தெரிவித்திருக்கும் கருத்து அதற்கு மாறாக, அவர் இன்னும் பக்குவப்படவில்லை போல் தோன்றுகிறது.

அண்ணாமலைக்கு ஏன் இந்த பயமும் பதற்றமும். நிர்மல் குமாருக்கும் அண்ணாமலைக்கும் என்ன ரகசியம் இருக்கிறது என்று தெரியவில்லை, அல்லது ஏதாவது ரகசியம் இருந்தால் அதை அதிமுகவில் சொல்லிவிடுவாரோ என்று பயப்படுகிறாரா என்பது எங்களுக்கு தெரியவில்லை. இதற்கு அவர்தான் தெளிவாகப் பதில் சொல்லவேண்டும் என்று விளாசியுள்ளார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version