கிரிக்கெட்
IPL- இரண்டு போட்டியிலும் சொதப்பல்; கடுப்பில் கோலி செய்த காரியத்தைப் பாருங்க!
2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கிரிக்கெட் அணி இரண்டு லீக் போட்டிகளில் விளையாடியுள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி வாகை சூடி, நல்லத் தொடக்கத்துடன் தொடரை ஆரம்பித்துள்ளது. இதுவரை ஆர்.சி.பி ஒரு முறை கூற ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. இந்த காரணத்தினால் விராட் கோலி மீது பல தரப்பினரும் தொடர்ந்து விமர்சனம் வைத்து வருகிறார்கள். இந்நிலையில், அவர் இந்த ஆண்டுக்கான இரண்டு போட்டிகளிலும் அந்தளவுக்கு சரியாக ஆடவில்லை. இரண்டு ஆட்டங்களிலும் சரியாக 33 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் கோலி.
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் பெங்களூர் – ஹைதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 149 ரன்கள் எடுத்தது இதில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 59 ரன் எடுத்தார். 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்கியது.
தொடக்கத்தில் சற்று தடுமாறிய ஹைதராபாத் அணி, இறுதியாக டேவிட் வார்னரின் நிதானமான ஆட்டத்தால் வெற்றி பெற்றுவிடும் நிலைக்குச் சென்றது. ஆனால், 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 143 ரன்கள் எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஹைதராபாத் அணி விளையாடிய இரண்டு போட்டியிலும் தோல்வியை தழுவியுள்ளது.
இந்த போட்டியில் கேப்டன் கோலி, 33 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். அப்போது மைதானத்தை விட்டு பெவிலியன் திரும்போது வீரர்கள் அமர்வதற்காக போடப்பட்ட நாற்காலியை தனது பேட்டால் குத்தி, தள்ளிவிட்டு உள்ளே சென்றார். இந்த காட்சிகள், நேரடியாக ஒளிபரப்பப்பட்ட நிலையில், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் ஐபிஎல் நிர்வாகம், பெங்களூர் கேப்டன் கோலியின் இந்த செயலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது ஐபிஎல் நிர்வாக விதிமுறைப்படி முதல் நிலை விதி மீறலாகும். இந்த விதிமீறலுக்கு போட்டியின் நடுவர்கள் தண்டனை அளிப்பது தொடர்பாக முடிவு எடுக்கலாம். அவர்களின் முடிவே இறுதியானது. இருப்பினும், தான் செய்த தவறை போட்டி முடிந்த பிறகு கோலி ஒப்புக்கொண்டார்.