தமிழ்நாடு
முடிவுக்கு வருகிறது தேமுதிக எதிர்காலம்: இதுதான் கடைசி தேர்தலா?
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிக தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துக் கொண்டே இருந்த நிலையில், பேச்சுவார்த்தைக்கு அழைத்த போது தங்களுடைய சக்திக்கு மீறி தொகுதிகள் கேட்டதாகவும் சிறப்பாக கவனிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் இதனை அதிமுக ஏற்றுக் கொள்ளாததால் வேறு வழியின்றி அந்த கூட்டணியில் இருந்து வெளியேறியது
அதன்பின் அமமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. அங்கும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை அடுத்து தற்போது எந்த கூட்டணியிலும் இல்லாமல் தனித்து போட்டியிட வேண்டிய நிலையில் உள்ளது. காங்கிரஸ், பாஜக, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, பாமக போன்ற குறிப்பிட்ட சதவீதத்தை வாக்கு வங்கியாக வைத்திருக்கும் கட்சிகளே கூட்டணியுடன் பாதுகாப்பாக போட்டியிடும் நிலையில் தேமுதிக தனது அவசர முடிவால் தனித்துப் போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது
மொத்தத்தில் கேப்டன் இல்லாத கப்பல் போல் தேமுதிக தற்போது தள்ளாடிக் கொண்டு வருவதாகவும் இந்தத் தேர்தலுடன் தேமுதிகவுக்கு முடிவு கட்டப்படும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கேப்டன் விஜயகாந்த் கஷ்டப்பட்டு வளர்த்த கட்சியையும் சேர்த்த தொண்டர்களையும் பிரேமலதா, எல்.கே.சுதீஷின் பேராசை மற்றும் விஜயபிரபாகரனின் முதிர்ச்சியற்ற பேச்சால் அக்கட்சிக்கு முடிவுரை எழுதப்படவுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.