தமிழ்நாடு
அது என்னங்க கூவத்தூர் ரகசியம்… போட்டுடைத்த கருணாஸ்!
கடந்த 2017 ஆம் ஆண்டு, கூவத்தூரில் அமைந்துள்ள ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் சசிகலா தரப்பினரால் ஒரே இடத்தில் வைக்கப்பட்டிருந்தனர். அப்போது அங்கு என்ன நடந்தது என்பது குறித்து இதுவரை சரியான தகவல்கள் வெளியே வரவில்லை. தற்போது தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூவத்தூர் ரகசியம் சிறிது சிறிதாக கசிந்து வருகிறது.
2016 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்ததை அடுத்து, சசிகலா முதல்வராக பதவியேற்க முற்பட்டார். ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதனால், அவர் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக தேர்ந்தெடுத்தார். அந்த நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம், 11 எம்.எல்.ஏ-க்களுடன் அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டு வந்தார். அப்போது நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி தரப்பு வெற்றி பெற்றது. ஆட்சியும் 4 ஆண்டுகளுக்கு மேல் நடந்தது.
இப்போதைய சூழலில் சசிகலா தரப்பை ஒரங்கட்டிய எடப்பாடி தலைமையிலான அதிமுக, ஓ.பி.எஸ்.ஸை சேர்த்துக் கொண்டு தேர்தலில் களமிறங்கியுள்ளது.
இப்படியான சூழலில் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளார் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ். 2016 ஆம் ஆண்டு அவர், அதிமுக சார்பில் திருவாடனை தொகுதியிலிருந்து போட்டியிட்டார். தற்போது அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள கருணாஸ், ‘கூவத்தூரில் ஜெயலலிதாவின் படத்திற்கு முன்னால் விளக்கு ஏற்றி, சசிகலா முன்னிலையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அத்தனை பேரும் சத்தியம் செய்தனர். என்ன சத்தியம் செய்தனர் என்பது சசிகலாவுக்குத்தான் வெளிச்சம். அப்படி செய்த சத்தியத்தை மீறியவர்கள் தான் இன்று ஆட்சியில் இருப்பவர்கள்.
அப்படிப்பட்டவர்கள் இன்று எங்களை அரசியல் அநாதைகளைப் போல ஆக்கியுள்ளனர். விரைவில் வரும் தேர்தலில் எப்படி போட்டியிடுவோம் என்பது குறித்து அறிவிப்பேன்’ என்றார்.
சில நாட்களுக்கு முன்னர் தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ‘கூவத்தூர்ல டிடிவி தினகரன் எங்களுக்கு ஊத்திக் கொடுத்தான். ஊத்திக் கொடுத்து குடிய கெடுத்தான். இது நடக்கலைனு அவன சொல்ல சொல்லுங்களேன் பார்ப்போம்’ என்று கூறி அதிரவிட்டார்.