ஆரோக்கியம்

சிறுநீரக கல்லடைப்பு என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது? என்ன தீர்வு?

Published

on

கல்லடைப்பு நோய் என்பது சிறுநீரகப் பாதையில் ஏற்படும் நோய்களில் மிக முக்கியமானது ஆகும். இந்த கல்லடைப்பு என்பது சிறுநீரகப் பாதை, சிறுநீரகம் மற்றும் நீர்த்தாரை, நீர்ப்பை, நீர்ப்புழை போன்ற இடங்களில் ஏற்படும்.

இந்தியாவில் ஆண்களுக்கு 12% பேருக்கும் பெண்களுக்கு 6% பேருக்கும் 20 முதல் 40 வயதிலேயே இந்த நோய் ஏற்படுகிறது. இந்நோய் வருவதற்கு முக்கிய காரணங்கள் முறையற்ற உணவுப் பழக்கம், தண்ணீர் குறைவாகக் குடிப்பது, உடல் பருமன் அதிகப்படியான தாது உப்பு படிதல், மாறிவரும் வாழ்வியல் ஆகியவையாகும்.

நாம் உண்ணும் உணவின் சாரத்தின் பகுதி சிறுநீரகத்தில் சிறுநீராகப் பிரிக்கப்பட்டு வெளியேறுகிறது. சிறுநீரகம் அல்லது சிறுநீர்ப் பாதையில் அளவுக்கு அதிகமான யூரிக் அமிலம், கால்சியம் போன்ற தாது உப்புக்கள் தேங்குவதால் அல்லது கல் உருவாவதைத் தடுக்கும் காரணிகளான சிட்ரேட் ஆகியவை குறைவாக இருப்பதாலும் உருவாகின்றன.

வாதம், பித்தம், கபம் அல்லது வளி, அழல், ஐயம் என்னும் மூன்று விஷயங்களும் நம் பாரம்பரிய மருத்துவத்தின் அடித்தளங்களாக இருக்கின்றன. உடலின் ஒவ்வோர் அசைவையும் நகர்த்தும் உயிர்த் தாதுகள் அவை. இவற்றைக் குறித்த அடிப்படை அறிவு நமக்கு இருக்க வேண்டும்.

இவற்றில் ஒன்றான அழல் தாது தன்னளவில் மிகுதிப்ப்படும்போது உணவின் சாரத்தில் உள்ள உப்பில் சில வகை உறைந்து கல்லாக உருவெடுக்கின்றன. இவ்வகையான உப்புக்கள் அளவில் சிறிதாக இருக்கும்போது சிறுநீருடன் எளிதில் வெளியாகிவிடும். அளவில் பெரிதாக இருக்கும்போது நோய்க்கான அறிகுறிகளை உண்டாக்குகின்றன.

சிறுநீரக கல்லடைப்பு அறிகுறிகள்

இடுப்பின் பின்பகுதியில் ஒரு பக்கம் அல்லது இரு பக்கங்களில் வலி
கல் உருண்டு வரும்போது தொடையிடுக்கு வழியாக சிருநீர்புழை வரை வலி பரவுதல்
சிறு குளிர்சுரம், குமட்டல், வாந்தி
சிறுநீர் எரிச்சல், நின்று நின்று சிறுநீர் இறங்குதல்
இரத்தம் கலந்து சிறுநீர் வெளிப்படுதல்
கல்லடைப்பின் வகைகள்
வளி கல்லடைப்பு, அழல் கல்லடைப்பு, ஐய கல்லடைப்பு

சிறுநீரக கல்லடைப்பு மருத்துவம்

கல்லடைப்பு நீங்க சில பயனுள்ள எளிய வழிகளைப் பின்வருமாறு காண்போம்.
உணவை முறைப்படுத்துவதுதான் ஒரே வழி. பிரதானமாக உப்பு. நாள் ஒன்றுக்கு 5 கிராமுக்கு மேல் உப்பு சேர்த்துக் கொள்ளக் கூடாது. நிறைய தண்ணீர் பருக வேண்டும். புரதச் சத்துக்காக இறைச்சி உள்ளிட்ட அசைவ உணவுகளை விட பயறுகள்,பருப்பு உள்ளிட்ட சைவ உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சித்த மருத்துவத்தில் நெருஞ்சில், நீர்முள்ளி, அருகம்புல், சிறுகன்பீளை, கொத்தமல்லி, நன்னாரி, மூக்கிரட்டை, வெங்காயம், எரழிஞ்சில், சுண்டை ஆகிய மூலிகைகளை முறைப்படி சுத்தம் செய்து குடிநீர் செய்யும் முறைப்படி குடிநீராகவோ, சூரணம் செய்து வெந்நீரிலோ உட்கொள்ளக் கல் கரைந்து சிறுநீரின் வழியாக வெளிப்படும். சிலாசத்து பற்பம், நண்டுக்கல் பற்பம், குக்கில் பற்பம், விரால் மீன், தலைக்கல் பற்பம், கல்நார் பற்பம், வெடியுப்பு சுண்ணம், நவாச்சார சுண்ணம், சல மஞ்சரி, சலோதரி மணி, கல்லுடைக் குடோரி மாதிரிகளையும் எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் கோடை களத்தில் இந்நோய் வற்றாமல் தடுக்க எலுமிச்சம்பழ சாற்றில் தண்ணீர் கலந்து பருகுதல் வேண்டும்.

உணவில் முள்ளங்கி, வாழைத்தண்டு, சுரைக்காய், பீர்க்கங்காய், வெள்ளரி, இளநீர், கீரை வகைகளில் பசலைக்கீரை, சிறுகீரை இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

சிறுநீரக கல்லடைப்பு பிரச்சனை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்

சாக்கலேட், சில கீரை வகைகள், முந்திரி, பாதாம், பிஸ்த்தா போன்றவற்றை உண்பது தவிர்க்கப்பட வேண்டும்.கோஸ், தக்காளி, பால், அசைவ உணவு, காளிப்ளவர், கோட்டை உள்ள பழங்கள் ஆகியவையும் தவிர்க்கப்பட வேண்டும்.

பொதுவாக 5 முதல் 6 மில்லி மீட்டர் விட்டமுள்ள கற்கள் சிறுநீர் வழியாகவே வெளியேறி விடும். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்தால் அல்லது சி டி ஸ்கேன் செய்தால் கற்களை கண்டுபிடிக்கலாம். இதன் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட கல்லின் அளவு மற்றும் இடத்தை பொறுத்து லேசரோ அல்லது அறுவை சிகிச்சையோ செய்ய வேண்டி வரும்.

அதிக உடல் உழைப்பு காரணமாக வியர்வை மூலமாக நீரிழப்பு ஏற்படுவதால் ஆண்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் வரக்கூடும். அதிக நேரம் மல ஜலம் கழிக்காமல் அமர்ந்தபடி பணிபுரிவோருக்கு அதிகம் ஏற்பட வாய்ப்புண்டு. சூடான இடங்களில் வேலை செய்வோர், நீர் குடிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ள வேலைகளில் பணி புரிவோருக்கும் ஏற்பட வாய்ப்புண்டு.

மேலே சொன்னவற்றைக் கொண்டு எச்சரிக்கையாகச் செயல்பட்டு மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்து கொண்டால் இந்த நோயிலிருந்து விடுபடலாம்.

Trending

Exit mobile version