சினிமா செய்திகள்
மயில்சாமிக்கு அன்று என்ன நடந்தது? விவரிக்கும் அவரது மகன்!
நடிகர் மயில்சாமி சில தினங்களுக்கு முன் அதிகாலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார். இந்த எதிர்பாராத மரணச்செய்தியை கேட்டு திரையுலகமே பெரும் சோகத்தில் மூழ்கியது. இவரது மறைவுக்கு திரையுலகினர். அரசியல் பிரபலங்கள், தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில் மயில்சாமி இறந்த அன்று என்ன நடந்தது என்பதை அவரது மகன் யுவன் தனியார் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் விவரித்துள்ளார். அதில், காலையில் படப்பிடிப்பு முடிந்து மதிய உணவை வீட்டில் எடுத்தார். அதன் பின்னர் மற்றொரு படத்துக்கு டப்பிங் கொடுக்க ஸ்டூடியோவுக்கு சென்றார்.
எல்லாம் முடித்துக்கொண்டு மாலை டிரம்ஸ் சிவமணி உடன் சேர்ந்து மேகநாதீஸ்வர் கோயிலுக்கு சென்று சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டனர். அங்கு இரவு 10 மணி முதல் காலை 3 மணி வரை இருந்துவிட்டு, அப்புறம் தான் வீட்டுக்கு வந்தார். இரவு முழுவதும் தூங்காமல் இருந்ததால் ஒரே ஒரு இட்லி தான் சாப்பிட்டார். அதன் பின்னர் மூச்சு விட முடியாமல் மிகவும் சிரமப்பட்ட அவரை நாங்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றோம்.
எங்கள் கார் தெரு முக்கை தாண்டும்போதே அவர் இறந்துவிட்டார். பின்னர் மருத்துவமனையில் அவர்களும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்றே கூறினார்கள். இருந்தாலும் ராமசந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அவர்களும் அவரது மரணத்தை உறுதி செய்தனர். கடைசியாக 5 மணியளவில் அவரது மரணம் அதிகாரப்பூர்வமாக உறுதியானது என்றார் அவரது மகன் யுவன்.