கிரிக்கெட்
உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட்: மைதானத்தில் திடீரென மயங்கி விழுந்த வீராங்கனை!
![connell - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/03/connell.jpg)
உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் இந்த தொடரில் எட்டு அணிகள் கலந்து கொண்டிருக்கும் நிலையில் இந்திய அணி நான்காவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று மேற்கிந்திய தீவுகள் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்திருந்தது.
இதனை அடுத்து 141 ரன்கள் என்ற இலக்கை நோக்கி வங்கதேச அணி விளையாடிக் கொண்டிருந்த நிலையில் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இந்த போட்டியில் 47-வது ஓவரில் மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்துவீச்சாளர் வீராங்கனை கான்னல், திடீரென மயங்கி விழுந்தார். இதனால் மைதானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது உடல்நிலை தேறி வருவதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஸ்டெப்னி டெய்லர் கூறியபோது கான்னல் திடீரென மயக்கம் அடைந்தார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை செய்து வருகின்றனர். அவர் எப்போதும் ஒரு போராட்ட குணம் படைத்தவர் என்பதால் விரைவில் அவர் இந்த பிரச்சனையிலிருந்து மீண்டு குணமடைவார் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.