தமிழ்நாடு
தமிழக போலீஸுக்கு இனி வாராந்திர விடுமுறை: டிஜிபி அறிவிப்பு!
தமிழக காவல் துறையினருக்கு இனி வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் என்று காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு அறிவித்து உள்ளார்.
தமிழக காவல் துறைக்குத் தற்போது மாதம் ஒரு நாள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்கிற நிலைதான் உள்ளது. இதை மாற்றித் தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காவலர்கள் தங்களது உடல்நிலைய் பேணிக்க ஏதுவாகவும், தங்கள் குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்கும், வாரத்தில் ஒரு நாள் வாராந்திர ஓய்வு கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும்.
வார ஓய்வு தேவையில்லை என்று சொன்னால், அவர்களுக்கு மிகை நேர ஊதியம் வழங்கப்படல் வேண்டும். அதேபோல ஓய்வு தினத்தன்று பணியில் இருக்கும் காவலர்களுக்கும் மிகை நேர ஊதியம் வழங்கப்படல் வேண்டும்.
காவலர்களின் பிறந்தநாள் மற்றும் திருமண நாளன்று விடுமுறை அளித்தல் வேண்டும்.
காவல் துறையின் சார்பாக காவலர்களின் பிறந்தநாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துச் செய்தி காவல் கட்டுப்பாட்டு அறையின் வானொலி மூலமாக தெரிவிக்க வேண்டும்.