தமிழ்நாடு
வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு: இன்றும் நாளையும் மழை!
தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், டிசம்பர் 3-ஆம் தேதி (இன்று) தமிழகத்தின் வடக்கு கடலோர மாவட்டங்கள், ஆந்திராவின் தெற்கு கடலோரப் பகுதி, ராயலசீமா வட்டாரத்தில் பெருமழை இருக்கும். மேலும் டிசம்பர் 4-ஆம் தேதி நாளை கர்நாடகா தெற்கு உட்பகுதி, தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் உட்பகுதிகளில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் டிசம்பர் 6-ஆம் தேதி தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியானது தற்போது தென்கிழக்கு வங்கக் கடல், அந்தமான் கடல் பகுதியில் நிலவி வருகிறது. இது வரும் 6-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல், இந்தியப் பெருங்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.