தமிழ்நாடு
நடராஜன் போல் நானும் விக்கெட் எடுப்பேன், வாய்ப்பு தாருங்கள்: சரத்குமார் பிரச்சாரம்
வாய்ப்பு கொடுத்தால் நானும் நடராஜன் போல் விக்கெட் எடுப்பேன் என்றும் எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்றும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் பேசியுள்ளார்.
மதுரை வடக்கு தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து சரத்குமார் பிரசாரம் செய்தார். அப்போது அவர் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டதால் தான் நடராஜன் சாதனை செய்துள்ளார் என்றும் அதே போல் எங்களுக்கும் ஒரு வாய்ப்பு அளித்தால் நாங்களும் விக்கெட் எடுப்போம் என்றும் கூறி பிரச்சாரம் மேற்கொண்டார்.
இன்று கூகுளில் நடராஜன் என்று தட்டிப் பார்த்தால் வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் பெயர்தான் வரும். ஏனெனில் அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை அவர் சரியாகப் பயன்படுத்தி, திறமையை வெளிப்படுத்தினார், பல விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதே போல் எங்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தால் விக்கெட்டுகளை வீழ்த்துவோம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த பிரச்சாரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் தன்மை பற்றி தெரிய வேண்டும் என்றால் தென்காசி மக்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்றும் அவர் தெரிவித்தார். எம்ஜிஆர் அவர்கள் அதிமுக கட்சி ஆரம்பிக்கும் முன்னரே அவருடன் தான் இருந்ததாகவும், திமுக மீது ஜனாதிபதியிடம் ஊழல் புகார் கொடுக்க எம்ஜிஆர் தலைமையில் ஒரு கூட்டம் சென்றபோது அந்த கூட்டத்தில் இருந்த மாணவர்களில் ஒருவன் நான் என்றும் அதனால் அதிமுக தொடங்குவதற்கு முன்னரே எனக்கு எம்ஜிஆருடன் தொடர்பு உண்டு என்றும் சரத்குமார் தெரிவித்தார்.