தமிழ்நாடு
நிலக்கரி எடுக்க ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்!
காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் இதனை மதிக்காமல் தஞ்சை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், மொத்தம் 66 இடங்களில் ஆழ்துளையிட்டு நிலக்கரி எடுப்பதற்கான அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
6 நிலக்கரி சுரங்கங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள 11 இடங்களிலும், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்திலும் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு விவசாயிகள், அரசியல் தலைவர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட தஞ்சையில் பழுப்பு நிலக்கரி எடுக்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. திருவாரூர், தஞ்சை, மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க அனுமதி இல்லை என்றார்.
மேலும், புதிய நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க தமிழக அரசு எக்காரணம் கொண்டும் அனுமதி அளிக்காது. நிலக்கரி சுரங்க விவகாரம் குறித்து நாளை சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிப்பார். புதிய நிலக்கரி சுரங்க விவகாரம் பற்றி சட்டப்பேரவையில் நாளை அறிவிப்பு வெளியிடப்படும் என்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.