தமிழ்நாடு

அதிமுகவின் கோட்டை கொங்கு மண்டலத்தை உடைத்துள்ளோம்: மு.க.ஸ்டாலின் பெருமிதப்பேச்சு!

Published

on

தேர்தலில் வாக்களித்து வெற்றிபெற வைத்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தை திமுக பல்வேறு பகுதிகளில் நடத்தி வருகிறது. அதன்படி பொள்ளாச்சியில் நடந்த கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்று சொல்லப்பட்ட கூற்றை மக்கள் உடைத்துள்ளனர் என குறிப்பிட்டார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக நாடு முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றாலும் தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை. தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி தேர்தல் நடந்த 38 தொகுதிகளில் 37 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இந்த வெற்றி நாடு முழுவதும் திரும்பி பார்க்கும் வெற்றியாக அமைந்துள்ளது.

இதனையடுத்து தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தை பல்வேறு மாவட்டங்களில் நடத்தி வரும் திமுக நேற்று பொள்ளாச்சியில் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தை நடத்தியது. இதில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேர்தல் நடந்த நேரத்தில் வாக்கு கேட்பதற்காக உங்களைத் தேடி ஓடோடி வந்தேன். அதுபோல நன்றி கூறுவதற்காகவும் ஓடோடி வந்துள்ளேன்.

திமுக கூட்டணிக்கு வாக்களிக்காதவர்களுக்குச் சேர்த்து குரல் கொடுத்து ஏன் திமுகவுக்கு நான் வாக்களிக்கவில்லை என்று எண்ணக் கூடிய வகையில் திமுக எம்பிக்கள் செயல்பட உள்ளனர். கொங்கு மண்டலத்தை அதிமுகவின் கோட்டை என்று கூறுவார்கள். ஆனால், அதிமுகவின் கோட்டை என்று கூறப்பட்ட கூற்றை மக்கள் உடைத்து ஆயிரத்தில் அல்ல, லட்சத்தில் வெற்றிபெற வைத்திருக்கிறார்கள் மக்கள் என்று பெருமிதத்துடன் கூறினார்.

seithichurul

Trending

Exit mobile version