கிரிக்கெட்

4வது டெஸ்டுக்கு முன்னர் இங்கி., அணிக்கே ஏற்பட்ட உடல்நல பாதிப்பு!- ரகசியம் சொன்ன ஸ்டோக்ஸ்

Published

on

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் முடிந்தது. இந்தப் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா, தொடரையும் 3 – 1 என்ற ரீதியில் கைப்பற்றி சாதனைப் படைத்தது. இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது இந்தியா.

இந்தத் தொடரின் கடைசி இரண்டு போட்டிகள் அகமதாபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி மைதானத்தில் தான் நடைபெற்றது. மூன்றாவது போட்டியில் படுதோல்வியடைந்த இங்கிலாந்து, ‘மைதானம் சரியில்லை. அது முழுவதும் இந்தியாவுக்குச் சாதகமாக அமைக்கப்பட்டு உள்ளது’ என்று கிரவுண்டை குறை கூறியது. இந்திய பேட்ஸ்மேன்களும் அந்த பிட்ச்சில் திணறியதால் இப்படியான விமர்சனங்கள் சர்ச்சையானது. இதற்குப் பலரும் இங்கிலாந்து அணியை சாடியிருந்தனர்.

இந்நிலையில் அகமதாபாத் டெஸ்ட் போட்டிகளின் போது தங்கள் அணிக்குள் என்ன நடந்தது என்பது குறித்து இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

‘4வது டெஸ்ட் போட்டி நடக்கும் போதே, எங்கள் அணியின் பலருக்கு வயிறு சார்ந்த பிரச்சனைகள் எழுந்தன. அகமதாபாத்தின் வெப்பநிலை மற்றும் புதிய சூழலால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டோம்.

குறிப்பாக நான் ஒரே வாரத்தில் 5 கிலோ குறைந்துவிட்டேன். என்னைப் போலவே டோம் சிப்லி 4 கிலோவும், ஜிம்மி ஆண்டர்சன் 3 கிலோவும் இழந்தார்கள். ஜாக் லீச், அடிக்கடி வயிறு சரியில்லாமல் டாய்லெட்டில் அதிக நேரம் செலவிட்டார். இதுவெல்லாம் டெஸ்ட் போட்டியில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் இப்படி காரணம் சொல்லி இந்தியாவின் வெற்றியைக் குறைத்து மதிப்பிட மாட்டேன். அவர்கள் சிறப்பாக விளையாடி வெற்றியடைந்தார்கள்.

இந்தத் தொடரில் பெற்ற அனுபவங்களைக் கொண்டு அடுத்தடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவதில் நானும் எங்கள் அணி வீரர்களும் கவனம் செலுத்துவோம்’ என்றார் ஸ்டோக்ஸ்.

அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து – இந்தியாவுக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்தத் தொடர் வரும் 12 ஆம் தேதி தொடங்குகிறது.

 

Trending

Exit mobile version