தமிழ்நாடு

ஆயிரக்கணக்கில் வாக்காளர்கள் நீக்கம்: சந்தேகத்தை ஏற்படுத்தும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை!

Published

on

நேற்று முன்தினம் தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் கடந்தமுறையை விட குறைவான வாக்கு சதவிகிதமே பதிவாகியது. இந்நிலையில் பல தொகுதிகளில் ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓக்கி புயல் கடுமையாக தாக்கிய கன்னியாகுமரி மாவட்டத்தில் முட்டம், தூத்தூர் ஆகிய பகுதிகளிலும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் உட்பட 40 ஆயிரம் வாக்காளர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது பெரும் சந்தேகத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மத்திய சென்னையில் 40 ஆயிரம் இஸ்லாமியர்கள் உள்பட 75 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அந்த தொகுதியில் போட்டியிட்ட எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த தெஹ்லான் பாகவி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தேர்தல் ஆணையத்திடம் புகாரும் அளித்துள்ளார்.

அதில், மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் அமமுக கூட்டணியில் பரிசுப் பெட்டகம் சின்னத்தில் நான் போட்டியிட்டேன். வேட்பாளர் என்ற முறையில் ஒவ்வொரு பூத்துக்கும் சென்று பார்வையிட்டேன். அப்பொழுது, கடந்த தேர்தலில் வாக்களித்த வாக்காளர்கள், இத்தேர்தலில் தங்களின் பெயர் விடுபட்டதாகக் கூறி தேர்தல் அதிகாரிகளிடம் முறையிட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் இதுகுறித்து தெரிவித்தபோது, கடந்த மாதம் வரை அவர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்தநிலையில், இந்தத் தேர்தலில் எந்தவித முன் அறிவிப்புமின்றி அவர்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

எனக்குக் கிடைத்த தகவலின்படி, மத்திய சென்னை தொகுதி முழுவதும் சுமார் 40 ஆயிரம் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட 75 ஆயிரம் வாக்காளர்கள் பெயர்கள் விடுபட்டுள்ளது. பொதுவாகவே, தேர்தலின்போது, இறுதி செய்யப்பட்ட வாக்காளர்களை மட்டும் அனுமதிக்கக் கூடிய தேர்தல் அதிகாரி, எவ்வாறு பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்கள் முறையிட்ட பிறகு அனுமதிப்பதும், முறையிடாமல் இருக்கும் பட்சத்தில் அனுமதி மறுப்பதும் என்ற கேள்விக்குத் தேர்தல் ஆணையம் பதில் கூற கடமைப்பட்டுள்ளது.

விடுபட்டுள்ள 75,000 வாக்காளர்கள் பெயர்களைப் பட்டியலில் இணைக்க வேண்டும். இத்தனை வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதற்கான காரணத்தை விசாரிக்க வேண்டும். அதற்குக் காரணமாக இருந்த அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version