தமிழ்நாடு
தமிழகத்தில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை: தேர்தல் ஆணையம் தகவல்!
தமிழகத்தில் நேற்று முன்தினம் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 17-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் நேற்று முன்தினம் மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் 71.90 சதவிகித வாக்குகள் பதிவாகின. கடந்தமுறை 73.68 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் இந்த முறை இந்த வாக்கு சதவிகிதம் குறைந்துள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளி விபரத்தின்படி, வேலூரை தவிர்த்து தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதில் 28896279 ஆண்கள், 29540800 பெண்கள், 5688 மூன்றாம் பாலினத்தவர் என 58442767 வாக்காளர்கள் மொத்தம் உள்ளனர். இவர்களில் 16417983 பேர் நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தலில் வாக்களிக்கவில்லை.
இந்த தேர்தலில் போக்குவரத்து வசதி சரியாக செய்துகொடுக்கப்படவில்லை, வாக்குச் சாவடிகளில் போதிய ஏற்பாடு இல்லை, வாக்களிக்கும் இயந்திரம் கோளாறு, பல வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது என பல புகார்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.