இந்தியா
தேர்தல் முடிவுகள் வெளியாக 6 மணி நேரம் தாமதமாகும்!
கடந்த 19-ஆம் தேதியுடன் நாடு முழுவதும் மக்களவை தேர்தல் முடிவுக்கு வந்தது. 7 கட்டங்களாக நடந்த தேர்தலின் போது பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகிறது. நாளை காலை 8 மணி முதல் இந்த பணி தொடங்குகிறது.
நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணும் பணியில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதன் பின்னர் 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.
வழக்கமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் மாலைக்குள் முடிவுகள் வெளியாகிவிடும். ஆனால் இந்த தேர்தலில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாக்கு ஒப்புகைச்சீட்டுகளும் எண்ணப்படுவதால் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாவதற்கு 5 முதல் 6 மணி நேரம் வரை தாமதம் ஆகும் என கூறப்படுகிறது.
இதனால் நாளை மாலைக்கு பின்னரே அதாவது இரவில் தான் அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.