டிவி
சித்ரா தற்கொலை வழக்கு: ஹேம்நாத்திடம் நடக்கும் குறுக்கு விசாரணை… வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்!
சின்னத்திரை நடிகையான சித்ரா தற்கொலை விவகாரம் தொடர்பான வழக்கில், அவரது கணவர் ஹேம்நாத்திடம் பலகட்ட விசாரணை நடந்தது. அதைத் தொடர்ந்து அவரை தமிழக காவல் துறை கைது செய்துள்ளது. இந்நிலையில் அவரிடம் நடந்த விசாரணையில் சில அதிர்ச்சிகர தகவல்கள் வெளிவந்துள்ளது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ‘முல்லை’ என்ற ரோலில் நடித்து தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்தவர் சித்ரா. அவர் சில நாட்களுக்கு முன்னர், தான் தங்கியிருந்த ஓட்டல் அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது இச்சம்பவம். சித்ராவின் கணவர் ஹேம்நாத், மன ரீதியாக கொடுத்த துன்புறுத்தல்கள் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. இப்படி நினைத்ததற்கு முக்கிய காரணம், ஹேம்நாத் பற்றி சித்ராவுடன் நடித்த சக நடிகர்கள் சொன்ன கருத்துகள்தாம்.
இதன் அடிப்படையில் அவரிடம் 5 நாட்களாக குறுக்கு விசாரணை செய்தது போலீஸ். அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை வட்டாரத்திலிருந்து சில அதிர்ச்சிகர தகவல்கள் வந்துள்ளது. அதன்படி கடைசியாக சித்ராவுக்கும் ஹேம்நாத்துக்கும் இடையிலான சந்திப்பில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஆனதாகவும், சண்டையின் இறுதியில் ஹேம்நாத் சித்ராவிடம் கடுமையாக நடந்து கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. குறிப்பாக சித்ராவிடம் ஹேம்நாத், ‘நீ செத்துத் தொல’ என்று திட்டிவிட்டு சென்றுள்ளதாக தெரிகிறது. இதனால்தான் சித்ரா மனமுடைந்து தன் உயிரை எடுத்துக் கொண்டார் என்று கூறப்படுகிறது.
இப்படி போலீஸ் வட்டாரத்திலிருந்து தகவல்கள் வந்தாலும், இதுவரை காவல் துறை தரப்பு அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.